இந்த முறையும் ஜீரோ.. கூடவே ஆம் ஆத்மிக்கும் வேட்டு வைத்த காங்கிரஸ்! டெல்லி தேர்தல் முடிவுகள்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இப்போது சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் கிட்டதட்ட எல்லா தொகுதிகளிலும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. தொடக்கத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அங்கும் கொஞ்ச நேரத்தில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது.. இறுதியில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக அங்கு கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சூழலில், இப்போது அதிஷி முதல்வராக இருக்கிறார்.

இந்தத் தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. இதில் தற்போது வெளியாகியுள்ள டிரண்டை வைத்துப் பார்க்கும் போது பாஜகவின் கைதான் சற்று ஓங்கி இருக்கிறது. ஆம் ஆத்மி கடும் போட்டி அளித்து வருகிறது. இரு தரப்பும் தான் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள சூழலில் அதில் கிட்டதட்ட எல்லா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. அங்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. அதுதான் பட்லி தொகுதி. இந்தத் தொகுதியில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவேந்திர யாதவ் போட்டியிட்டுள்ளார்.
இந்த பட்லி தொகுதியில் ஆம் ஆத்மியில் இருந்து அஜேஷ் யாதவ், பாஜகவில் இருந்து தீபக் சவுத்ரி, காங்கிரஸில் இருந்து தேவேந்திர யாதவ் போட்டியிட்டுள்ள சூழலில், அதில் முதலில் தேவேந்திர யாதவ் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் செல்ல செல்ல தேவேந்திர யாதவ் பின்னுக்கு தள்ளப்பட்டார். இறுதியில் அந்த தொகுதியில் பாஜகவின் ஆஹிர் தீபக் சவுத்ரி பெற்றி பெற்றார்.
கடந்த 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இந்த பட்லி தொகுதி தேவேந்திர யாதவ் தான் எம்எல்ஏவாக இருந்தார். ஆனால், 2015 மற்றும் 2020ல் தேர்தல்களில் தேவேந்திர யாதவால் வெல்ல முடியவில்லை. குறிப்பாக 2020ல் தேவேந்திர யாதவ் வெறும் 27 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்லி தொகுதியில் வெற்றி பெற்ற ஆஹிர் தீபக் சவுத்ரி பெற்ற வாக்குகள் 61 ஆயிரம். இரண்டாவது இடம் வந்த அஜேஷ் யாதவ் 46 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸின் தேவேந்தர் யாதவ் 41 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து சுமார் 87 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. இது பாஜக பெற்ற வாக்குகளை விட அதிகம்.
இந்த ஒரு தொகுதியில் மட்டுமில்லை, பல தொகுதிகளில் இதே நிலை தான். காங்கிரஸ் பெற்ற வாக்குகள் என்பது பல தொகுதிகளில் பாஜகவுக்குச் சாதகமாக, ஆம் ஆத்மி தோல்விக்கு வழிவகுத்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் அது நிச்சயம் பாஜகவுக்கு கடும் சவாலாகவே இருந்திருக்கும்.












Click it and Unblock the Notifications