அமைதியான ஆசிரியர் டூ நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் "மாஸ்டர் மைண்ட்.." யார் இந்த லலித் ஜா! பகீர் பின்னணி
டெல்லி: நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக்கில் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா சரணடைந்துள்ள நிலையில், அவர் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சிலர் அத்துமீறி நுழைந்து ஸ்ப்ரே அட்டாக் நடத்தினர். இருவர் நாடாளுமன்றத்தில் புகுந்து புகை வரும் குப்பிகளையும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திலும் சிலர் பிரச்சினை செய்துள்ளனர். பல மாதங்களாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக்: இதுவரை இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லலித் ஜா என்பவர் நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் 6 பேருக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் தான் லலித் ஜா இப்போது சரணடைந்துள்ளார்.
நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் நடத்தியவர்களுக்கு பாஸ் வழங்கியது ஏன்! பாஜக எம்பி பரபர.. என்ன சொன்னார்
இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு லலித் ஜா நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடினார். பீகாரைச் சேர்ந்த லலித் ஜா, கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். நாடாளுமன்றத்தில் ஸ்ப்ரே அட்டாக் நடத்திய இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டமான உபா மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இவர்: லலித் ஜா சுதந்திரப் போராட்ட வீரர் ஷாஹீத் பகத் சிங்கால் ஈர்க்கப்பட்டவர் என்று போலீசார் கூறுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே ஸ்ப்ரே அட்டாக் நடக்கும் போது, அதை வீடியோவாக எடுத்தவரே இவர் தான். வீடியோ ஊடகங்களில் என்பதற்காக இவர் அதை ஒரு என்ஜிஓ அமைப்பிடமும் கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே வெளியே நடந்த தாக்குதல் இணையத்தில் பரவி இருக்கிறது.
நிலக்ஷா என்பவர் நடத்தும் என்ஜிஓ அமைப்பில் இந்த லலித் ஜா பொதுச்செயலாளராக இருந்தார். லலித் ஜா இந்த நிலக்ஷாவுக்கு தான் தாக்குதல் தொடர்பான வீடியோவை அனுப்பி இருக்கிறார்.
அமைதியான மனிதர்: லலித் ஜா ஒரு அமைதியான மனிதர் என்றும் அவர் உள்ளூர் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தி வந்தார் என்றே அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரை பற்றிச் சொல்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொல்கத்தாவில் உள்ள புர்ராபஜாருக்கு தனியாக வந்துள்ளார். அங்கே வந்த இவர் அமைதியாகவே வேலை செய்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்த பகுதியில் இருந்து திடீரென காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.
லோக்சபா தாக்குதல் தொடர்பாக இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லோக்சபாவில் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்ட சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரை அங்கிருந்த எம்பிக்களே பிடித்துக் கொடுத்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல உள்ளே நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரச்சினை செய்த நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார்: இது தவிர இவர்கள் விக்கி ஷர்மா என்பவர் வீட்டில் தான் டெல்லியில் தங்கியிருந்த நிலையில், அவரையும் போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் லலித் ஜா இப்போது போலீசில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications