நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் நடத்தியவர்களுக்கு பாஸ் வழங்கியது ஏன்! பாஜக எம்பி பரபர.. என்ன சொன்னார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று ஸ்ப்ரே அட்டாக் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பாஸ் வழங்கி இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், ஸ்ப்ரே அட்டாக் நடத்தியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் புகைகளை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் திட்டமிட்டு அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார்.
விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை: நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications