கழிவுநீரை குடித்து கிராமத்தின் அவலத்தை சுட்டிகாட்டிய இளைஞர்... தருமபுரி அருகே விபரீத போராட்டம்!
தருமபுரி : தருமபுரி அருகே கழிவுநீரை குடித்து கிராமத்தின் அவலத்தை, அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டிக்காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. குமாரம்பட்டி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் பல வருடங்களாக காலதாமதம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 35 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றாமல் துர்நாற்றம் வீசும் குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்வதாகவும், இந்த குடிநீரை அருந்தினால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாவதாகவும் குழாயை புதுப்பித்து அல்லது புதிதாக பொருத்தப்பட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று பல்வேறு முறை புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களின் புகார்.

மேலும், தங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த தீர்மானத்தை ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், பழுதடைந்த மற்றும் துர்நாற்றம் வீசும் குடிநீர் குழாய்களை சரி செய்யாமல், ஒரு சில பகுதிகளில் மட்டும் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், குடிநீர் குழாய்களிலிருந்து துர்நாற்றம் வீசும் கறுப்பு நிறத்தில் சாக்கடை போல் இருந்த குடிநீரைக் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் எவ்வளவு வருடங்களாக இந்த நீரை நாம் குடித்துள்ளோம், இதனால் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையிலும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக, சாக்கடையை விட மோசமாக இருந்த பழுதடைந்த குடிநீர் குழாயில் உள்ள குடிநீரை அந்த இளைஞர் குடித்தார். சாக்கடை நீரை நானே குடிக்கின்றேன், அதனால் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஆதங்கத்துடன் கூறி, கிராம மக்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சாக்கடையைப் போல் காட்சியளிக்கும் குடிநீரை குடித்து கிராம மக்கள் பல பேர் நோய் தொற்றுக்குள்ளாகி அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த மோசமான அவல நிலை மாறும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தமிழக அரசுக்கும், தருமபுரி மாவட்டம் நிர்வாகத்திற்கும் கிராம மக்கள் மனக்குமுறலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications