10 வயதிலேயே எம்.பி. ஆவேன் என்று எழுதி வைத்த தருமபுரி செந்தில்குமார்! வாடகை வீட்டில் குடித்தனம்!
தருமபுரி: 10 வயதிலேயே என்றாவது ஒரு நாள் தாம் எம்.பி. ஆவேன் என்று எழுதி வைத்ததை நினைவு கூர்ந்துள்ளார் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.
அதே போல் எம்.பி. என்பதற்காக பெரிய பங்களா வீட்டில் எல்லாம் தாம் வசிக்கவில்லை என்றும் இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு செந்தில்குமார் எம்.பி. அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மருத்துவராக இருந்த போதும், அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் செந்தில்குமார் கோபமே பட்டதில்லை என்றும் அவர் அதிகமாக கூட யாரிடமும் பேசமாட்டார் எனவும் கூறிய அவரது மனைவி, அரசியல்வாதியாகி எம்.பி.ஆன பிறகு தான் இந்தளவுக்கு தனது கணவர் பேசுவாரா, கோபப்படுவாரா என்பதே தங்களுக்கு தெரியும் என்றார்.

எம்.பி. மனைவி என்று கடந்த 5 ஆண்டுகளில் யாரிடமும் தாம் சொன்னதில்லை என்றும் கோயிலுக்கு போனால் கூட வரிசையில் நின்று தான் சாமி கும்பிட்டுவிட்டு வருவேனே தவிர தனது கணவரின் பரிந்துரையை எதிர்பார்த்ததில்லை எனவும் செந்தில்குமார் எம்.பி.யின் மனைவி கூறியுள்ளார். தாம் பகுத்தறிவு வாதி என்றாலும் தனது மனைவி சாமி கும்பிடுவதை தடுத்ததில்லை என்று கூறிய செந்தில்குமார், தாம் ஒரு உணவு விரும்பி என்பதையும் ஒளிவு மறைவின்றி தெரிவித்திருந்தார்.
எந்த ஊரில் என்ன உணவு நன்றாக இருக்கும் எந்தக்கடையில் சாப்பிட வேண்டும் என்ற விவரத்தை தனது கணவர் செந்தில்குமார் எம்.பியிடம் தான் நண்பர்களும், உறவினர்களும் கேட்டுத் தெரிந்துக் கொள்வார்கள் என்றார் அவரது மனைவி சோபனா. தனது கணவர் செந்தில்குமார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றும் கல்லுரிக் காலங்களில் ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன் எனவும் கூறிய செந்தில்குமார், தாம் தொலைக்காட்சி பார்த்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் தினமும் பேப்பர் படிக்கும் பழக்கமும் தன்னிடம் கிடையாது என்றும் எல்லாமே டிஜிட்டல் என்றான பிறகு மொபைல் மூலமே எல்லாவற்றையும் படித்து அறிந்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications