தேர்தல் முடிந்த உடன் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பார்.. கொங்கு நாடு ஈஸ்வரன் பரபர குற்றச்சாட்டு!
தர்மபுரி: லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கப் போகிறார் என்று கொங்கு நாடு தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் நாளை புதன்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

பிரச்சாரம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இதனால் பிரச்சார களம் அனல் பறக்கும் வகையில் இருக்கிறது.
ஈஸ்வரன்: அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அந்தக் கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பிரச்சாரம் செய்தார். பாஜக மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, மோடியை ஆதரிக்கப் போகிறார் என்றும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.
குற்றச்சாட்டு: தர்மபுரி மாவட்டம் அரூரில் இந்தியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அங்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "இப்போது தேர்தல் என்பதால் சும்மா பாஜகவும் அதிமுகவும் தனித் தனியாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மோடியை ஆதரிக்கப் போகிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக பங்கு முக்கியம். இருவரும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இரு தரப்பும் கொண்டு வந்தார்கள். இதனால் தான் தமிழ்நாடு மேலே வந்தது. அப்படி வளர்ந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை மோடி திட்டமிட்டு கீழே தள்ளப் பார்க்கிறார். இந்த மோடியைத் தான் அதிமுக மறைமுகமாக ஆதரிக்கிறது. எனவே மோடியை வீழ்த்த அதிமுக தொண்டர்களும் நம்மோடு கைகோர்க்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
தர்மபுரி தொகுதி: தர்மபுரி லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறை திமுக சார்பில் வழக்கறிஞர் மணி போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து அசோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவில் இருந்து அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி களமிறங்குகிறார். இதன் காரணமாக அங்கே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று வேட்பாளர்களுமே மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
தர்மபுரியில் கடந்த லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் இருந்து செந்தில்குமார் போட்டியிட்டார். அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து பாமக சார்பில் அன்புமணி போட்டியிட்டார். இதில் இருவருக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் செந்தில்குமார் 5.7 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி 5 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.












Click it and Unblock the Notifications