5 மாத குழந்தையை, அய்யாவை பார்க்கக்கூட விடலை இந்த ஜிகே மணி.. அன்புமணியின் மகள்கள் கண்ணீர்
தர்மபுரி: எனக்கு குழந்தை பிறந்துள்ளது. என்னுடைய 5 மாத குழந்தையை, அய்யாவை பார்க்கக்கூட விடலை இந்த ஜி.கே.மணி... துரோகத்தை கண்முன்னே பார்த்தோம் என்று தேர்தல் பரப்புரையில் அன்புமணியின் மகள்கள் கண்ணீர் சிந்தியபடி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜிகே மணியின் மகன் தமிழ்குமரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அன்புமணியின் மகள்கள், ஜிகே மணி குறித்து கடுமையாக விமர்சித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பாடி செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ராமதாஸ் அணியை சேர்ந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாடி செல்வத்திற்கு ஆதரவாக அன்புமணியின் மகள்கள் பிரச்சாரம் செய்தனர்.

அப்போது அன்புமணியின் மகள்கள் கண்ணீர் சிந்தியபடி பேசும் போது, "என் அம்மா சௌமியா அன்புணி வந்து வேட்பாளராக தர்மபுரியில் நிற்கிறார்கள்.. என் அம்மாவிற்காகத்தான் பிரச்சாரம் செய்ய வந்தோம். ஒருவாரம் பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தோம்.. ஆனால் மனசு கேட்கவில்லை.. பென்னாகரத்தில் ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்த துரோகத்தை தான் மக்களிடம் நாம் பேச வேண்டும் என்று நினைத்தோம். இங்கு நாம் என்ன செய்கிறோம்.. தர்மபுரி கூட கவலை இல்லை.. நாம் ஜெயிக்கிறோம் இல்லை... அதை விட்டுவிடுங்கள்.. ஆனால் பென்னாகரத்தில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும்.. அந்த ஒரு விஷயத்திற்குத்தான் நாங்கள் உங்களை பார்க்கவே வந்துள்ளோம்.. சார் சொன்னார் பெரிய துரோகி வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கூறினார்.
அந்த துரோகத்தை கூட நின்று நாங்கள் கண்ணால் பார்த்தோம்... சும்மா சொல்லவில்லை.. எங்கள் குடும்பம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. நாங்கள் ஒவ்வொரு பொங்கல் மற்றும் விஷேசங்களுக்கும் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக இருப்போம்.. அய்யா தான் எங்கள் வழிகாட்டி, எங்கள் குல தெய்வம்.. ஒன்றாகவே இருப்போம்..
அண்மையில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது. எனது ஐந்து மாத குழந்தையை அய்யாவை பார்க்கக்கூட விடல இந்த ஜிகே மணி.. அய்யா என் குழந்தையை கூட பார்க்கவில்லை.. எங்கள் மீது எவ்வளவு பாசத்துடன் இருப்பார் தெரியுமா? ஆனால் ஜிகே மணி ஒரு துரோகி.. அவர் புள்ளை நன்றாக இருக்க வேண்டும்.. அந்த பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்.. நாங்கள் நாசமாக போக வேண்டும் என்று நினைக்கிறார். இந்த மாதிரியான ஒரு கேவலமான மனிதப்பிறவியை பார்க்கவே முடியாது..
அவர்கள் செய்த துரோகத்திற்காக திமுக கொடுத்த பரிசு தான் பென்னாகரம் தொகுதி வாய்ப்பு.. சொன்ன மாதிரியே திமுகவில் கேட்டு வாங்கியிருப்பார்கள். அப்படி வாங்கி போட்டியிட்டால் அவர்களின் கூட்டு தெரிந்துவிடும் அல்லவா.. திமுக தான் இதனை செய்கிறது என்று தெரிந்துவிடும்... அதனால் தான் மறைமுகமாக காங்கிரஸ் மூலமாக போட்டியிடுகிறார். ஜிகே தமிழ்குமரன் எல்லாம் இங்கு வரமாட்டார். அவரை எத்தனை முறை பார்த்திருப்பீர்கள்.. அவரை பென்னாகரத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்.. ஏனெனில் வந்தால் தானே பார்க்க முடியும்..
சௌமியா அன்புமணி 2024ல் தோற்றுப்போய்விட்டார்..ஆனால் எத்தனை முறை நீங்கள் அவரை பார்த்திருப்பீர்கள்.. எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் வந்துள்ளார்.. இந்த மக்கள் தான் அவர்களுக்கு எல்லாமே.. அதேபோல் தான் பாடி செல்வம் அண்ணன் உங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் இங்கே வருவார்" இவ்வாறு அன்புமணியின் மகள்கள் கூறினார்கள்.














Click it and Unblock the Notifications