வானுயர்ந்த வழுக்கும் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி..உச்சியில் ஏறியபோதே உறைந்த இதயம்! இளைஞர் பலியான சோகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 79 அடி கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வழுக்கு மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலியானார்.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த ஆண்டு இந்த கோவில் திருவிழாவானது கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாமிசாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவில் ஒவ்வொறு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து இன்று காலை பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்தல் மாவிளக்கு எடுத்தல் கிடாய் வெட்டுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவில் திருவிழா: நேற்று காலை முதல் முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு கோவில் முன்பாக குட்டி கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், படுகளம் போடும், நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முத்தாலம்மன் வாழ்கை, வரலாறு பாடலாகப் பாடப்பட்டது. பின்பு கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 79 அடி உயரமுள்ள கழுகுமரம் வெட்டி கொண்டு வரப்பட்டு அவற்றின் பட்டைகள் உரிக்கப்பட்டது.
வழுக்கு மரம்: பின்பு வழுக்கும் பொருட்களான எண்ணெய் வகைகள், சோற்றுக்கற்றாழை போன்ற வழுக்கும் பொருட்கள் தடவப்பட்டு கழுகுமரம் முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் ஊர் பொதுமக்களால் ஊன்றப்பட்டது. பின்பு கழுகுமரத்திற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் முறையாக விரதம் மேற்கொண்டு கழுகுமரம் ஏறுவர்.
பக்தர்கள் பங்கேற்பு: இளைஞர்கள் சிலர் கழுகுமரத்தில் ஏற முற்பட்ட பொழுது வழுக்கும் பொருள்களால் கழுகு மரத்தில் பாதியிலேயே வழுக்கி விழுந்தனர். சில இளைஞர்கள் கழுகுமரத்தில் ஏற முடியாமல் தத்தளித்தனர் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கம்பளியம்பட்டி அருகே பொத்தகணவாய்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுகுமர உச்சியை அடைந்து பரிசுப் பொருட்களை அவிழ்த்தார். இந்நிகழ்ச்சியில் கம்புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் பலி: இந்நிலையில் வழுக்கு மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலியானதால் திருவிழாவே சோகக் கடலானது. விழாவை முன்னிட்டு நேற்று வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்ற போது பொத்தகணவாய் பட்டியைச் சேர்ந்த பிச்சை அம்பலம் மகன் சுப்பிரமணி (30) மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது . இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.












Click it and Unblock the Notifications