கோட் படத்துக்காக விஜய் பேசுகிறார்! ஒரு வேளை உதயநிதி ஏதாவது சொன்னாரோ? அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்
திண்டுக்கல்: கோட் பட ரிலீஸுக்காக நீட் குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் சொன்னாரா என தெரியவில்லை என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூருக்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வந்திருந்தார். அப்போது அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வரிசையில் இணைந்துவிட்டார். கமல்ஹாசன் ஒரு காலத்தில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியலை எதிர்க்கும் மக்கள் நீதி மய்யம் என்று டிவியை உடைத்தார்.
அதன் பிறகு தற்போது மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக திமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறார். அது போல்தான் விஜய் கடந்த முறை பேசிய போது போதை பொருட்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் அதில் கடமை இருக்கிறது என பேசியிருந்தார்.
பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அடுத்து அவருடைய கோட் படம் ரிலீஸாக வேண்டும். உதயநிதி ஏதாவது சொன்னாரா என தெரியவில்லை. அதனால் அவர் திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறியுள்ளார்.
கல்வி பொது பட்டியலில் இருக்கக் கூடாது, மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று விஜய் கூறுகிறார். ஆனால், இன்று இருக்கக் கூடிய கல்விக் கொள்கை, தாய்மொழி கல்விக் கொள்கை. இந்த தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது ஆங்கில திணிப்பு கல்விக் கொள்கை. மேலும், விஜய் 3 விஷயங்களைக் கூறி நீட் தேர்வு வேண்டாம் என்று பேசுகிறார்.
திமுகவினர் கூறுவதை போல் விஜய்யும் இந்தியாவை ஒன்றியம் என பேசுகிறார். திமுக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து பேசுகிறார். அதனால் இன்னொரு மக்கள் நீதி மய்யமாக தமிழக வெற்றிக் கழகம் மாறிவிட்டது. விஜய் கொஞ்சம் இளைஞர் சக்திகளை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார்.
மக்கள் மத்தியில் போதை பொருள், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதைவிட்டு விட்டு படிக்கும் மாணவர்கள் இடையே இந்தியாவை ஒன்றியம் என பேசி பிரிவினையை ஏற்படுத்தியுள்ளார் விஜய். திமுக துணையோடு தமிழக மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சித்து பேசினார்.
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது: நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் நான் மூன்று முக்கிய பிரச்சினைகளை பார்க்கிறேன். முதலில் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
கல்வி முன்பு மாநில பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு பொது பட்டியலுக்கு கொண்டு வந்த போதுதான் சிக்கல் ஏற்பட்டது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. இரண்டாவது மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்து பாருங்கள்.
மூன்றாவதாக, நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது என கூறிய அவர் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு கோரி போடப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications