மாட்டிக்கினாரு ஒருத்தரு. ஏட்டையா அப்படியே நைசா எடுங்க! பார் கல்லாப் பெட்டிக்குள் கையை விட்ட போலீஸ்.!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பார் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்த மதுவிலக்கு காவலர்களின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் சில்லறை மது விற்பனை தடுப்பது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குறிச்சியில் நடைபெற்று வரும் பாரில் சோதனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர் சென்றுள்ளனர்.
அந்த பாருக்கு அனுமதியில்லை எனவும், சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை விரட்டிவிட்டுள்ளனர் போலீசார். மேலும் முதியவர் ஒருவரிடம் அவர் டவுசர் பையில் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை காவலர் எடுத்துக் கொண்டார். பின்னர் பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த 40,000 ரூபாய் பணத்தை மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மதுவிலக்கு காவலர் ஜேம்ஸ் ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் பாரில் இருந்த பணத்தை எடுத்தது குறித்த சிசிடிவி காட்சிகளை பாரின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வேகமாகப் பரவிய நிலையில் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோதமாக பணத்தை திருடிச்சென்றதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதற்கிடையே பணத்தை காவலர்கள் எடுத்துக் கொண்டது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, காவலர்கள் பணத்தை திருடவில்லை எனவும், சட்டவிரோத மதுவிற்பனை குறித்து தகவலறிந்து சோதனைக்கு சென்றதாகவும், அப்போது அங்கிருந்த 1,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததாக, இதுதொடர்பாக பாரின் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனால் கல்லாவில் இருந்தது 40 ஆயிரம் ரூபாய் பணம் எனவும், மதுபாட்டில்களை பறிமுதல் செய்யாமல், பணத்தை மட்டும் எடுத்துச் சென்றது ஏன்? எனவும், மதுகுடிக்க வந்தவரிடம் இருந்து பணத்தை எடுத்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications