"ராகுல் காந்தி" கொலை செய்யப்பட்டபோது.. யாரது யாரது அங்கே.. ஓ... திண்டுக்கல் சீனிவாசனா.. அப்ப சரி!!!
பழனி அருகே மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையாக பேசி உள்ளார்.
பழனி: இறந்தவர்களை உயிரோடு இருப்பவர் என்றும், உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டவர் என்றும் அடிக்கடி பேசிவருபவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், திண்டுக்கல்லார் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியமே..
அமைச்சரான பின்புதான் எத்தனை எத்தனை சர்ச்சைகள், விவகாரமான பேட்டிகள், எக்குத்தப்பு வார்த்தைகள் என தொடர்ந்து உளறி கொட்டிக் கொண்டே இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குதான் ஏதோ ஆகிவிட்டதுபோல. "அம்மா இட்லி சாப்பிட்டாங்க" என்று ஆரம்பித்தவர் இன்னும் சர்ச்சையை விடவில்லை.

திரும்பவும் உளறல்
3 நாட்களுக்கு முன்னாடிதான் மோடியை சொல்வதற்கு பதிலாக பிரதமர் வாஜ்பாய் அருமையான பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று சொல்லி இறந்த வாஜ்பாய்க்கு உயிர் கொடுத்தார். இதேபோல ஒரு பேச்சு நேற்று பழனி அருகே பேசினார். ஆயக்குடியில் அதிமுக கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

பொய் சொல்லுவார்
"ராகுல்காந்தி கொலை செய்யப்பட்ட போது, கொலையாளிகளான ஒற்றைக்கண் சிவராஜன் மற்றும் தனு ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருப்பது போன்று திமுக பத்திரிக்கையில் படம் வெளியிடப்பட்டது. ஆனால் அது ஒரு பொய். அப்போதே திமுக தலைவராக இருந்த கருணாநிதி பயங்கரமான பொய் சொல்லுவார். அவரைப் போலவே அவரது மகன் ஸ்டாலினும் பொய் சொல்லுகிறார்" என பேசினார்.

திருத்தி கொள்ளுங்கள்
இப்படி ஒரு முறை இல்லை, ராகுல் கொலை செய்யப்பட்டார் என்றே திரும்ப திரும்ப சொன்னார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்கத்தில் இருந்த அவரது உதவியாளர் பதறிப் போய், அமைச்சரின் பிஏ, காதில் வந்து விஷயத்தை சொன்னதும், "ராஜீவ் காந்தி கொலை என்று திருத்திக் கொள்ளுங்கள்" என்று கேஷூவலாக சொன்னார்.

முதிர்ச்சியற்ற பேச்சு
இவ்வளவு பெரிய விஷயத்தை தவறாக சொல்லி விட்டோமே என்ற உறுத்தலும், வருத்தமும் கொஞ்சமும் அப்போது அமைச்சரிடம் காணோம். நாளுக்கு நாள் அதிமுகவின் செல்வாக்கு மக்களிடம் சரிந்து வருவதற்கு இதுபோன்ற அமைச்சர்களின் பகீர் மற்றும் முரணான தகவல்களும், முதிர்ச்சியற்ற பேச்சும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications