தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் என்றாலே அமைதியான கிராமங்களும், பாசமான மனிதர்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதே திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நடந்திருக்கும் ஒரு விபரீத சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது. குடும்பத் தகராறு என்பது எல்லா வீடுகளிலும் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், அது ஒரு கட்டத்தில் கொலையில் முடியும் போதுதான் சட்டத்தின் முன் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டி கிராமத்தில் அப்படி என்னதான் நடந்தது?
உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகராஜ்.. 49 வயதாகிறது.. அங்குள்ள ஒரு தனியார் நூற்பாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பகல் முழுக்க உழைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வரும் சுகராஜுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு விஷயத்தில் புகைச்சல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதங்களும், சண்டைகளும் வெடித்துள்ளன.
வழக்கம்போல நேற்றைய தினமும் இருவருக்கும் இடையே வீட்டில் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வார்த்தைப போர், நேரம் செல்ல செல்ல இருவருக்குள்ளும் இருந்த ஆத்திரத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த 2 பேரும் எமோஷனல் ஆகிவிட்டனர்.. இதனால் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், சமையலறைக்குள் அவசரமாக ஓடினார் முருகேஸ்வரி.. அங்கிருந்த கனமான தோசைக்கல்லை தூக்கி வந்து, சுகராஜின் தலையிலேயே ஓங்கி அடித்துள்ளார்.. இதை கணவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
இந்த பயங்கர தாக்குதலில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுகராஜ், அலறுவதற்குக் கூட நேரமில்லாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டர்.. கணவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த பின்புதான் முருகேஸ்வரிக்கு தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்திருக்கிறது. பிறகு பயத்தில் உறைந்து போனார்.. ஆனால் அங்கிருந்து தப்பி ஓட நினைக்காமல், நேராக வடமதுரை காவல் நிலையத்திற்குள் நுழைந்து, நடந்த உண்மைகளைக் கூறி அங்கிருந்த போலீசாரிடம் சரணடைந்தார்.
தகவலறிந்து பதறியடித்த வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகராஜின் உடலைக் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்குக் காரணமான அந்த தோசைக்கல்லையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சாதாரண குடும்பத் தகராறு, தோசைக்கல்லால் ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது எப்படி என்பது குறித்து முருகேஸ்வரியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications