திண்டுக்கலில் மகளை கழுத்தறுத்துக் கொன்று தந்தை தற்கொலை... மனைவியையும் கொல்ல முயற்சி
திண்டுக்கல்: குடும்பத் தகராறில் மகளை கொன்ற தந்தை, மனைவியை சுத்தியால் அடித்து கொல்ல முயன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அருகே மட்டப்பாறையை சேர்ந்தவர் தங்கமணி (வயது 35). இவர் மனைவி முனீஸ்வரி (27), மகன் சந்தோஷ்குமார் (7) மகள் வர்ஷஹரிணி (4) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதம் முன்பு ஊர் பெரியவர்கள் நடத்திய பேச்சுவார்தைக்கு பின் செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் ஒரு வாடகை வீட்டில் தங்கமணியும், முனீஸ்வரியும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

மனைவி மீது தாக்குதல்
கணவன், மனைவி இருவரும் வீட்டின் அருகேயே ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கும் போது தங்கமணிக்கும், முனீஸ்வரிக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தங்கமணி, முனீஸ்வரியின் தலையில் ஓங்கி சுத்தியலால் அடித்துளளார். இதில் முனிஸ்வரி ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார்.

கழுத்தறுத்துக் கொலை
இதனால் மனைவி இறந்துவிட்டதாக எண்ணிய தங்கமணி, தனது மகள் என்றும் பாராமல் வர்ஷஹரிணியை கத்தியால் கொடூரமாக அறுத்துள்ளார். இதனால் குழநதை வர்ஷஹரிணி ரத்த வௌளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின்பு தங்கமணி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதி
மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த முனீஸ்வரி ,மகள் கொல்லப்பட்டு இருப்பதையும், கணவன் தூக்கிட்டு இறந்துகிடப்பதையும் கண்டு அலறி உள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த முனீஸ்வரியை அவர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகத்தில் கிராமம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செம்பட்டி போலீசார் தங்கமணி, வர்ஷஹரிணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மகளை கொன்ற தந்தை, மனைவியை சுத்தியால் அடித்து கொல்ல முயன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications