காந்தி தாத்தா வர்றாரு.. கதற விட போறாரு.. ரயிலை மறித்த மக்கள்! இன்றளவும் பூஜை! திண்டுக்கல் சிலிர்ப்பு
திண்டுக்கல்: இந்தியா சுதந்திரம் அடைந்த உன்னத நிகழ்வை பூரிப்போடு கொண்டாடி வரும் இந்த வேளையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை "ஒன்இந்தியா தமிழ்" வரலாற்றுப் பதிவுகளோடு வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் காந்தி நகருக்கு பிறகு தமிழகத்தில் மகாத்மா காந்தியின் பெயரை தாங்கி ஒரு கிராமம் மட்டுமல்ல ஒரு பல்கலைக்கழகமே இயங்கி வருகிறது. அங்கு மகாத்மா காந்தியடிகள் கால் வைத்தார் என்பதும் வரலாறு..
காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் தலைநகராக காந்திநகர் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் காந்தியடிகள் கால் வைத்திருக்கிறார். அதுதான் காந்தி கிராமம்.. வெறும் கிராமம் மட்டுமல்ல.. சுதந்திர தாகமும் காந்தியடிகள் மீதான பாசமும் ஒருங்கே இணைந்த புண்ணிய பூமி இது.

சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலம். அதாவது, 1946 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கிட்டத்தட்ட சுதந்திரம் கிடைத்துவிடும் என மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலம். மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் மகாத்மா காந்தியடிகள்.
மதுரையில் இருந்து ரயிலில் திண்டுக்கல் வழியாக செல்கிறார் என கேள்விப்படுகிறார்கள் ஒரு கிராம மக்கள். இப்போது சின்னாளபட்டி என்று அழைக்கப்படும் அந்த கிராமத்தில் சுங்குடி சேலைகள் மிகவும் பிரபலம். இப்படியாக நெசவாளர்களும் உழைக்கும் மக்களும் காந்தியடிகள் வருகிறார் என கேள்விப்பட்டவுடன் அவரை சந்திக்க வேண்டும் என மிக்க ஆர்வத்தில் இருக்கிறார்கள்.. ரயில் வந்து கொண்டிருக்கிறது.

அப்போது மகாத்மா காந்தியடிகளை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரயில் பாதையை மறைக்கின்றனர். மக்கள் தன்னைச் சந்திக்கவே வந்திருக்கிறார்கள் என்ற தகவலை கேட்ட மகாத்மா காந்தியடிகள் ரயிலில் இருந்து இறங்கி மக்களை சந்தித்து பேசுகிறார். அன்றிலிருந்து தற்போது வரை அந்த கிராமம் காந்தி கிராமம் என அழைக்கப்படுகிறது. காந்தியடிகள் இறங்கிய அதே இடத்தில் தற்போது நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு பல தசாப்தங்களாக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, காந்தியடிகள் கால் வைத்த இடத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அந்த இடத்தை சுற்றியுள்ள சுமார் 250 ஏக்கர் நிலமானது தானமாக வழங்கப்பட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்டது. காந்தியடிகள் மரணத்திற்குப் பிறகு அதாவது 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் தற்போது தேசிய அளவில் புகழ் பெற்ற நிகர் நிலை பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

டிவிஎஸ் நிறுவனரின் ஒரே மகளான திருமதி.சௌந்தரம் -டாக்டர் ராமச்சந்திரன் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது 61 பாடப்பிரிவுகளுடன் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மக்களின் நன்கொடைகள், பூமிதான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு காந்திய கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது ஆலமரம் போல விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது பெருமை கொள்ளத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த பல்கலைக்கழகத்திற்கு இதுவரை இந்தியாவின் பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் வந்து காந்தியடிகள் கால் வைத்த இடத்தை வணங்கி செல்வதோடு அவரது அஸ்திக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் கிராம சுகாதார ஆய்வாளர் பட்டய படிப்பு தமிழ்நாட்டில் இங்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக பல்வேறு புகழுடன் பல்கலைக்கழகம் மட்டுமல்ல காந்தியடிகள் கால் வைத்த இடமும் இன்றளவும் அப்பகுதி மக்களால் ஒரு கோவில் போல வணங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications