செல்போன் வக்கிரம்.. கல்யாணமாகி 2 வாரம் தான் ஆச்சு! வேண்டாத வேலை பார்த்த விமல்.. திகுதிகு திண்டுக்கல்
திண்டுக்கல்: இளம் பெண்ணின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி ஆபாச புகைப்படங்களை பதிவிட்டதாக இளைஞரை கைது செய்திருக்கின்றனர். அந்த இளைஞருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நண்பனின் மனைவிக்கும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறி உள்ளனர் போலீசார். மேலும், சமூகவலைதள கணக்குகளை கையாளும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண் சமூக இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் வேகமாக பரவியது. இந்த படங்களை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது தான் அந்த பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆபாச படங்கள் வெளியானது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார்.

இதனையடுத்து புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆபாச படங்களை பகிர்ந்தது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த விமல் (வயது 31) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது திண்டுக்கல்லில் நண்பருடன் தங்கி உள்ளார்.
தனது தண்பரிடம் தனக்கு சிம் கார்டு ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவரது நண்பர் தனது பெயரில் சிம்கார்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து விமல் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி இன்ஸ்டாகிராமில் பல்வேறு படங்களை பகிர்ந்தார். இந்த விவரம் தெரிந்ததும், சம்மந்தப்பட்ட பெண் அவரிடம் விவரம் கேட்டுள்ளார். இதனிடையே தனது என்ஜினியரிங் படிப்பு முடிந்து சொந்த ஊரான விருதுநகருக்கு விமல் சென்று விட்டார்.
போலி கணக்கு விவரம் தகவல் வெளிவந்தவுடன் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்தார். இதனால் தான் ஏற்கனவே வைத்திருந்த பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் அழித்துவிட்டார். போலீசார் விமலை கைது செய்ததும் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது யார் தனக்கு சிம்கார்டு வாங்கிக் கொடுத்தாரோ அந்த நண்பரின் மனைவிக்கே விமல் ஆபாச படங்களை அனுப்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனை விமல் பொழுது போக்குக்காக செய்தாரா? அல்லது வேறு உள்நோக்கத்துடன் செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் விமலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இருவீட்டார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகள் படங்களை பகிர வேண்டாம். ஏனென்றால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச படங்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தான் விதவை என்றும், தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் செய்தி வெளியானது. அதன் பிறகு தனது படத்தை பார்த்து அந்த பெண் புகார் அளிக்கவே சம்மந்தப்பட்ட நபரை தேடி வருகிறோம். இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.












Click it and Unblock the Notifications