ஆளை விடுங்க... மாவட்டச் செயலாளர்களை பாருங்க... ஒதுங்கிக் கொள்ளும் அமைச்சர் ஐ.பெரியசாமி..!
திண்டுக்கல்: தன்னிடம் சிபாரிசு கேட்டு வருபவர்களிடம் முடிந்தவரை மாவட்டச் செயலாளர்களை பார்த்து பேசுமாறு கூறி ஒதுங்கிக் கொள்கிறாராம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் டெண்டர், கல்லூரி இடம், கட்சியில் பொறுப்பு கேட்டு கோரிக்கை என எந்த விவகாரத்திலும் முன்பை போல் இவர் நேரடியாக தலையிடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளருமான செந்தில்குமார் எம்.எல்.ஏ.வையும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சக்கரபாணியையும் பார்க்குமாறு கூறி சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார் அமைச்சர் ஐ.பி.

தென் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் தென்மாவட்ட திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. வத்தலக்குண்டு யூனியன் சேர்மனில் தொடங்கி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், அமைச்சர், கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் என பல உயரங்களை கண்டவர். அடிமட்டத்திலிருந்து படிப்படியாக உயரத்தை அடைந்தவர் என்பதால், கீழ்மட்ட நிர்வாகிகளின் எதிர்பார்ப்பும் அவர்கள் எதற்காக தன்னை சந்திக்க வந்து நிற்கிறார்கள் என்பது வரையிலான அனைத்து தகவலும் அவருக்கு அத்துப்படி.

திண்டுக்கல்
இந்நிலையில் அமைச்சரவையில் தான் எதிர்பார்த்த வகையில் முக்கியத்துவம் கிடைக்காத வருத்தத்தில் இருந்து வரும் அவர், துறைசார்ந்த பணிகள் இருந்தால் மட்டுமே சென்னையில் இருக்கிறார். மற்றபடி பெரும்பாலும் திண்டுக்கல்லில் அதுவும் குறிப்பாக தன்னை தொடர்ந்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து வரும் ஆத்தூர் தொகுதிக்குள் தான் உலா வருகிறார். வெளிநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணிக்கு மேல் இவர் வீடு திரும்பினாலும் அவரை சந்திப்பதற்காக பெரும் கூட்டமே காத்திருக்கிறது.

கட்சி புரோட்டகால்
11 மணியானாலும் அவர்களை சந்தித்து பேசி அனுப்பிவிட்டுத் தான் வீட்டுக்குள் நுழைகிறார். அந்த வகையில் கல்லூரியில் சீட், டெண்டர் பணிகள், கட்சியில் பதவி கோரி வருபவர்களை முடிந்தவரை கட்சியின் புரோட்டகால் படி மாவட்டச் செயலாளர்களை பார்த்துவிடுமாறு அறிவுறுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. அவர்கள் ஒரு முடிவெடுத்து அதில் நான் தலையிட்டால் நன்றாக இருக்காது எனக் காரணமும் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு முகம் அறிந்த நெடுநாட்களாக தன்னுடன் பயணிக்கும் மிக முக்கிய நபர்களுக்கு மட்டுமே ஓரிரு காரியங்களை செய்துகொடுக்க முன் வருகிறாராம்.

மாவட்டச் செயலாளர்கள்
தற்போது திண்டுக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக உள்ள நிலையில், கிழக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் இருக்கிறார். திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளராக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இருக்கிறார். இதனிடையே ஐ.பி.யை பார்ப்பதை காட்டிலும் ஐ.பி.எஸ்.ஸை (ஐ.பி.செந்தில்குமார்) பார்க்கவே திண்டுக்கல் திமுகவினர் இப்போது அதிகம் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications