'வளர்த்த கிடா மார்பில்'.. திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் புது மாப்பிள்ளை மரணம்.. என்ன நடந்தது?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு கழுத்தில் முட்டியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. பொங்கல் பண்டிகை மட்டுமின்றி அந்தோணியர் கோவில் திருவிழாவின் போதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

எங்கு நடத்தப்படுகிறது: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் அமைந்திருக்கிறது. அந்தோணியர் கோவில் திருவிழாவும், அந்த விழாவையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஜனவரி 17-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு போட்டி திங்கள்கிழமையான நேற்று நடந்தது.
750 காளைகள் பங்கேற்பு: பெரிய அந்தோணியார் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க புகையிலைப்பட்டி, கொசவபட்டி, பஞ்சம்பட்டி, நத்தம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, முசிறி, லால்குடி, அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் இருந்து 750 காளைகள் வந்தன. 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் ஊர் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு அரசு வழங்கிய டோக்கன்களை பெற்ற 734 காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டின. சில அடங்காத காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினார்கள்
புதுமாப்பிள்ளை மரணம்: இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் அருகே எஸ்.காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த செபஸ்தியார் (27) என்பவர் தனது காளையை சரக்கு வேனில் அழைத்து வந்திருக்கிறார். அந்த காளையை வேனில் இருந்து கீழே இறக்கியபோது மிரண்ட மாடு தலையை அங்கு மிங்கும் ஆட்டியது. இதில் எதிர்பாராதவிதமாக மாட்டின் கொம்பு செபஸ்தியாரின் கழுத்தில் குத்தியது. இதில் நிலைகுலைந்த செபஸ்தியாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செபஸ்தியார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த செபஸ்தியாருக்கு விக்டோரியா என்ற மனைவி உள்ளார். அவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. செபஸ்தியார் வளர்த்த காளையே அவரையே முட்டி சாகடித்த சம்பவம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடியை சேர்ந்த போலீஸ்காரர் 32 வயதாகும் முத்துக்குமார் , பெண் காவலர் கோகிலா மற்றும் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications