அரசு பள்ளி வகுப்பறை.. திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. சில நொடிகளில் உயிர்தப்பிய மாணவிகள்!
திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவிகள் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கான வகுப்பறையில் சுமார் 20 மாணவிகளுக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது

மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
அப்போது பள்ளியின் மேற்கூரை துகள்கள் திடீரென துண்டு துண்டாக விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியே தலை தெறிக்க வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த சில நிமிடங்களில் வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் மாணவிகள் அமரும் நாற்காலியில் விழுந்தது. இது மாணவிகளை தூக்கிவாரி போட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்ததால் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் வெளியே வர கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்த செய்தியை அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

பழமையான கட்டிடங்கள்
இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழமையான கட்டிடங்கள் ஆகும். பராமரிப்பு இன்றி அனைத்து கட்டிடங்களும் விரிசல் விட்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவில் கட்டிடங்கள் உள்ளது. தற்போது மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் மேலும் கட்டிடங்கள் ஆபத்தை உருவாக்கக் கூடும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
ஆகவே மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். பழமையான கட்டிடங்களில் மேலும் மாணவிகளை அமர வைக்காமல் மாற்று இடத்தில் அமர வைத்து வகுப்புகள் நடத்தவேண்டும். வரும் நவம்பர் 1-ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications