இதுதான் தமிழ்நாடு.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில்.. போட்டோ பாருங்க.. நெகிழும் நெட்டிசன்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் கொடுத்துள்ளார் இஸ்லாமியர் ஒருவர். இது தொடர்பான தகவல் பலகை வெளியாகி பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. பலரும் இதுதான் தமிழ்நாடு என்று நெகிழ்ந்து வருகிறார்கள்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன. இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்களில் தினசரி அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பழனி, திருச்செந்தூர், திருத்தனி, திருப்பரங்குன்றம் என முருகனின் அறுபடை வீடுகளிலும் தினசரி அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோவில், கோவை மருதமலை, பண்ணாரி அம்மன் கோவில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், கோவை கோனியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லை காந்திமதி கோவில்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட ஏராளமான புகழ் பெற்ற திருக்கோயில்களில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொதுவாக தமிழக கோயில்களில் யார் வேண்டுமானாலும் கட்டளைதாரர்களாக இருந்து அன்னதானம் வழங்க முடியும். தினசரி யாராவது ஒருவர் கட்டளைதார்களாக இருந்து அன்னதானம் வழங்குவார்கள். அந்த வகையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த ஜூலை 12ம் தேதி சிக்கந்தர் பாட்ஷா -சாகிரா பானு ஆகியோர் அன்னதான உயதாரர்களாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் திண்டுக்கல் கோபால் நகரை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அப்சரா என்ற குழந்தைக்கு பிறந்த நாள் அதை முன்னிட்டு அன்னதானம் வழங்கியதாக தகவல் பலகையில் இடம் பெற்று இருந்தது.
இது தொடர்பாக புகைப்படத்தை பலரும் பகிர்ந்து அதற்கு கேப்சனாக இதுதான் தமிழ்நாடு நெகிழ்ந்து வருகிறார்கள். மதங்களை வைத்து பிரித்து இங்கு அரசியல் செய்ய முடியாது என்றும் கூறுகிறார்கள். இதனிடையே அந்த புகைப்படத்திற்கு கீழ் பலரும், பல கோயில்களுக்கு இஸ்லாமியர்கள் நன்கொடை அளித்துள்ளனர் என்று கூறி அதற்கான புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்தார்கள்.
மதங்களை கடந்து மனித நேயத்துடன் வாழ்வதே தமிழர்களின் பண்பாடு என்றும், மதத்தின் பெயரால வெறுப்புகளை தமிழ்நாட்டில் பரப்ப முடியாது என்றும் மதங்களை கடந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் சிலர்கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications