"சந்திரயான் 3.." ஆர்ப்பரித்து கொண்டாடுவோம் இந்த அற்புத தருணத்தை!
சென்னை: தாயையும், சேயையும் காக்க வேண்டிய இக்கட்டான ஒரு பேறுகால நிமிடம்.., கடைசி ஓவரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை ஃபைனல் கிரிக்கெட் போட்டி.., பொதுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட் வரும் அந்த நொடி.. இப்படி, வாழ்க்கையின் எந்த ஒரு முக்கிய தருணத்தையும் விட சிறிதளவும் குறைந்ததில்லை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அந்த விநாடி.
இஸ்ரோவின் லைவ் ஒளிபரப்பு அறிவிப்பில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த அறிவியல்பூர்வமான வார்த்தைகள், புரிகிறதோ புரியவில்லையோ, விஞ்ஞானிகளின் முகத்தில் பதற்றம் இருந்தால் பார்த்தவர்கள் முகத்திலும் அது பரவியது.. விஞ்ஞானிகள் எழுந்து கை தட்டினால், பார்க்கும் நமது கைகளும் தன்னிச்சையாக ஓங்கி ஓங்கி தட்டியது.

அது ஏதோ அறிவியல் நிகழ்வாக இல்லை, நமது உடலின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஓடிய உணர்வாக மாறியது. உலகின் ஒவ்வொரு மூலையிலுள்ள இந்தியனும், தானே நிலவுக்கு போனதை போல ஒரு நிமிடம் உணர்ந்தான். இஸ்ரோ அரங்கத்திற்குள் இருந்த விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் பார்ப்பவர் கண்களுக்கு நடமாடும் தெய்வம் போல காட்சிதந்தனர்.. பள்ளி, மாணவ மாணவிகள், நாமும் அதுபோல விஞ்ஞானியாகலாமா என்று யோசித்தனர்.
எப்படி அத்தனை உள்ளங்களையும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மாற்றியது ஒரு அறிவியல் நிகழ்வு? இந்த கேள்விக்கான விடை சூட்சுமமானது. மாணவர்கள், விஞ்ஞான ஆர்வலர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமே, அனைத்து தரப்பினருக்குமே, கேள்விக்கான ஏதாவது ஒரு பதிலை வைத்துள்ளது.., ஒரு தீர்வை தன்னிடத்தில் கொண்டுள்ளது "சந்திரயான் 3" என்பதுதான் அந்த சூட்சுமம்.

தேச பக்தி என்ற ஒற்றை கோணத்தில் மட்டுமே பார்ப்பவர்களுக்கு, தனது தேசம், நிலவின் தென் துருவத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்து, வல்லரசு நாடுகளையே வியப்பில் ஆழ்த்திவிட்டது என்பதை நினைத்து "கூஸ்பம்ப்" உண்டாகிறது. விண்வெளி ஆராய்ச்சி மன்னன், ஆனானப்பட்ட ரஷ்யாவின் "லூனா - 25" விழுந்து நொறுங்கிய தூசி அடங்கும் முன்பாக, ஒரு காலத்தில், அவர்களின் உதவியால் வளர்ந்த இஸ்ரோ அனுப்பிய விக்ரம் வீறு நடை போட்டதை பார்த்து கூடுதல் குதூகலம் தெறிக்கிறது.
தர்க்கரீதியாக யோசிப்பவர்களுக்கும் "சந்திரயான் 3" பதிலை வைத்துள்ளது. இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 431 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை மொத்தம் 124 விண்கலங்களில் இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. குறைந்த செலவில், அதிக வெற்றி விகிதத்தை கொண்ட விண்வெளி ஆய்வு அமைப்பில் இஸ்ரோவுக்குதான் முதலிடம். தங்கள் விண்வெளி தேவைக்கு பிற நாடுகள் இந்தியாவை சார்ந்திருக்க வைத்திருப்பது மாபெரும் வெற்றியாகும்.
"சந்திரயான் 3" வெற்றி, இந்தியாவின் மதிப்பை இன்னொரு படி மேலே தூக்கிவிட்டது. நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்கனவே, இலவச விண்வெளி சேவையை வழங்கி வருகிறோம். அவர்களை தொடர்ந்து கைக்குள் வைத்திருக்கவும் இஸ்ரோவின் நன்மதிப்பு நமக்கு உதவும். ஆம்.. வெளியுறவு கொள்கை வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது "சந்திரயான் 3".

'நாட்டில் பலருக்கு மூன்று நேர சாப்பாட்டுக்கே வழியில்லாத போது விண்வெளி ஆய்வு தேவையா..' என்று வினவுவோருக்கும் "சந்திராயன் 3" தக்க பதிலை தன்னிடத்தில் வைத்துள்ளது.
பிபிசி, சிஎன்என், கார்டியன் என சர்வதேச மீடியாக்களே, "இது ஒரு வரலாற்று சாதனை" என்று செய்தி வெளியிட்ட "சந்திரயான் 3" திட்டத்திற்கான மொத்த செலவு, "பார்பி," "ஓபன்ஹெய்மர்" போன்ற ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட மட்டுமல்ல, நம்ம ஊரில் உருவான "ஆதிபுருஷ்" திரைப்படத்தை விடவும் குறைவுதான்.
இதே வேகத்தில் போனால், நாட்டின் ஜிடிபியில் சுமார் 1 சதவீதம் பங்கை விண்வெளி பொருளாதாரத்துறை வகிக்கப்போகிறது. அமெரிக்கா பாணியில் தனியாரும் விண்வெளி ஆய்வில் ஈடுபடுவது அதிகரிக்கும் என்பதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் அடிகோலிடும். நிலவின் தெற்கு பகுதியில் ஏதாவது கனிமங்களோ, முக்கிய புது கண்டுபிடிப்புகளோ இருந்தால் அது இஸ்ரோவுக்கு போனஸ்.
அத்தனை கேள்விக்கும் சந்திரயானிடம் விடை உள்ளது, அடுத்த கேள்வி கேட்க யோசிக்கவிடாத அளவு தனித்து நிற்கிறது, நாட்டின் பெருமையையும் தூக்கி நிறுத்துகிறது.. அனைவரையும் மகிழ்விக்க இது போதாதா? ஆசையாக கொண்டாடுவோம், ஆர்ப்பரித்து கொண்டாடுவோம், ஆனந்த கூத்தாடுவோம் இந்த அற்புத தருணத்தை!












Click it and Unblock the Notifications