இடம்மாறிய "ஸ்வீட் பாக்ஸ்கள்".. திடீர்னு கேட்ட "கொலுசு சத்தம்".. ஆஹா.. புகாருடன் ஓடிய அறப்போர் இயக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்தக்கோரி அறப்போர் இயக்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது
ஈரோடு: இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி பல்வேறு தரப்பினர் புகார் தந்து வரும்நிலையில், அறப்போர் இயக்கமும் கோரிக்கை மனுவை தந்துள்ளது.. இதற்கான காரணத்தையும் அந்த இயக்கம் விளக்கமாக கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி எழுந்துள்ளது.. இதில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்ய வேண்டும் என்று திமுகவும், மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திமுகவும் மும்முரமாகின.
இதற்காக சில "தாராளங்களையும்" தொகுதிக்குள் உலாவ விட்டுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கின.

கூவாத குக்கர்கள்
அதாவது, ஆளுங்கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் தர திட்டமிட்டுள்ளதாகவும், தினமும் தலைக்கு 1000 ரூபாய், அசைவ பிரியாணி மற்றும் வீட்டுக்கு ஒரு குக்கர் என்று பட்டப்பகலிலேயே பட்டுவாடா நடக்கிறது என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.. குறிப்பாக, ஈரோடு கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வீட்டுக்குவீடு திமுகவினர் வெளிப்படையாக குக்கர் கொடுத்து வருவதாக புகார் கிளம்பியது. ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், அத்துடன் "குக்கர்களை"தருவதாக அதிமுகவினர் வீடியோ வெளியிட்டனர்.. வாக்காளர்கள் இந்த குக்கர்களை பெற்றுக்கொள்ள டோக்கன்கள் வழங்கப்பட்டதாம்.. குக்கர் கொடுக்கப்படும் குடோனையும் வீடியோவாக பகிர்ந்திருந்தனர்.

ஸ்வீட் பாக்ஸ்கள்
அதேபோல, அதிமுக தரப்பிலும் "ஸ்வீட்பாக்ஸ்கள்" விநியோகம் ஜரூராக நடப்பதாக சொல்லப்பட்டது.. அதிலும் அதிமுக தரப்பில் கொலுசு தரப்படுவதாக செய்திகள் வட்டமடித்தன.. எனவே இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்தது.. பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் சிவி சண்முகம் புகார் மனு ஒன்றை தந்திருந்தார். தேமுதிக சார்பிலும் புகார் தரப்பட்டது. தாங்கள் கொடுத்துள்ள புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தேமுதிக தெரிவித்திருந்தது..

கிருஷ்ணசாமி
"ஈரோடு மக்கள் தங்களது சொந்த வேலைக்குகூட வெளியே செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ளனர்.. இது ஜனநாயக விரோதம்... இந்த தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வரிசையில், அறப்போர் இயக்கமும் இணைந்துள்ளது.. "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து திமுக - காங்கிரஸ் கூட்டணி தினமும் 500 ரூபாய் கொடுத்து புதிய லஞ்ச முறை உருவாக்கியுள்ளதால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறப்போர் இயக்கம் புகார் மனுவை அளித்துள்ளது.

அறப்போர் இயக்கம்
இந்த புகார் தந்தபிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்க நிர்வாகிகள், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அழைத்துக்கொண்டு வந்து அங்கு உட்கார வைத்து தினமும் 500 ரூபாய் பணம் கொடுத்து புதியதாக லஞ்சம் கொடுக்கக்கூடிய முறையை திமுக, காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் உருவாக்கி உள்ளது... இதைத் தவிர பல பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கான ஆதாரங்களை இணைத்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை புகாரை வைத்துள்ளோம்.

நோ சான்ஸ்
ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இதை மீறி நடந்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளோம்.. தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் ரத்து செய்யக்கூடிய நடவடிக்கையையும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆதாரங்களை பரிசீலித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தன்னுடைய பரிந்துரைகளை அனுப்புவதாக நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்" என்றனர்.












Click it and Unblock the Notifications