கவனிச்சீங்களா? இரட்டை இலையை முடக்க வேண்டாம்.. உச்சநீதிமன்ற உத்தரவின் மற்றொரு அர்த்தமே இதுதான்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்க வேண்டாம். அது அதிமுகவிடம் இருக்க வேண்டும் என்பதை தான் இன்றைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலித்துள்ளது.
ஈரோடு: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இருவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலையை முடக்காமல் அதிமுகவிடமே வழங்க உச்சநீதிமன்றம் விரும்புவது இன்றைய உத்தரவின் மூலம் தெளிவாகி உள்ளதும், இது யாருக்கு சாதகம் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலையாட்டி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனை ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திய நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்தது. அதில், ‛‛ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை'' என தெரிவித்து இருப்பது தெரியவந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் புதுதிட்டம்.. ஈரோடு கிழக்கு வேட்பாளர் தேர்வுக்கு மாற்றுவழி! என்னவாம்?
உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மட்டும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ‛‛அதிமுக சார்பில் இடைக்கால உத்தரவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். வேட்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் நீக்கப்பட்டவர்களில் கருத்து கேட்க வேண்டும். இறுதியில் தேர்வாகும் வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்'' என உத்தரவிட்டனர்.
இரட்டை இலை முடக்கம் இல்லை
இதன்மூலம் இரட்டை இலை சின்னம் இன்னும் முடங்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. இதனை இன்றைய வழக்கில் தேர்தல் ஆணையமே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் தான் தற்போதைய இந்த உத்தரவு மூலம் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. அதாவது ஒரு தேர்தலில் ஒரே கட்சியை சேர்ந்த இருதரப்பு கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரும் பட்சத்தில் அது முடக்கப்படும். மாறாக இரு அணிக்கும் சுயேச்சையாக சின்னம் வழங்கப்படும். இதனை தமிழ்நாட்டின் முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்திருக்கலாம். சமீபத்தில் கூட மகாராஷ்டிரா சிவசேனா கட்சி பிரச்சனையில் சின்னம் முடக்கப்பட்டு இருவருக்கும் சுயேச்சை சின்னங்கள் தான் வழங்கப்பட்டது.
முடக்க விரும்பாத உச்சநீதிமன்றம்
ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை முடக்க விரும்பவில்லை. அதாவது பொது வேட்பாளரை நிறுத்தவும், பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வை இறுதி செய்யவும் கூறியுள்ளது. பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்யவும், அதுபற்றி அவைத்தலைவரே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப கூறப்பட்டுள்ளதால் நிச்சயம் இவர் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார். மேலும் நீதிமன்ற உத்தரவு என்பதால் இதனை நிச்சயம் பின்பற்றியே ஆக வேண்டிய சூழல் உள்ளது. இதன்மூலம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்பதும், மாறாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரில் யாரோ ஒருவரின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க இந்த உத்தரவு வழிவகுத்து உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.
யாருக்கு சாதகம்?
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவையொட்டி இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என முடிவு செய்ய பொதுக்குழுவை கூட்டாமல் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுவது கடினம் என்ற நிலையில் இந்த முடிவினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்ட நடவடிக்கை என்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக இருக்கும். ஏனென்றால் ஓ பன்னீர் செல்வத்தை விட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு என்பது அவருக்கு தான் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்க்கது.