இருக்கு.. எல்லாருக்கும் இருக்கு.. ஆவினில் அவ்வளவும் முறைகேடு.. அதிமுக மீது அமைச்சர் நாசர் பகீர்
அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்
ஈரோடு: ஆவின் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை தவறு கண்டறியப்பட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு செய்தார்... அப்போது பால் குளிரூட்டும் நிலையம், இனிப்பு வகைகள் தயாரிக்கும் இடங்களை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் சொன்னதாவது: "ஆவின் நிர்வாக பணிக்கு வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காவே திமுக அரசு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் சட்டத்தை இயற்றியுள்ளது.

ஆவின் விற்பனை
பொங்கலுக்கென்று ஆவின் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை... பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு 126 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய் வாங்க உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவரே ஒரு அதிமுக காரர்தான்.. ராஜேந்திர பாலாஜி உப்பு தின்றவர் என்பதால் தண்ணீர் குடித்துள்ளார்...

ராஜேந்திர பாலாஜி
சட்டம் தனது கடமை செய்துள்ளது. அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தவறு செய்யவில்லை எனில் ராஜேந்திரபாலாஜி ஏன் ஓடி ஒளிய வேண்டும்? அதிமுக ஆட்சிக் காலத்தில் 734 பேர் ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.. ஆவின் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன..

பொங்கல்
பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.. கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்து அது தொடர்பான குற்றங்கள் உறுதியானதையடுத்து, தவறு கண்டறியப்பட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... மீதமுள்ள 700 பேரின் பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது... இந்த 10 வருடங்களில் ஆவின் நிறுவனம் நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது..

ஊழல்
அதிமுக ஆட்சியில் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் அளவு தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்து இருக்கிறது... அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, மேற்கிந்திய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததை அதிமுக ஆட்சியில் முடக்கி வைத்திருந்தது.. இப்போது ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து ஏற்றுமதியை தொடங்க இருக்கிறோம்" என்றார். இந்த ஆய்வின் போது, அமைச்சர் சு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications