என்னாது விருதுநகர் எம்பி தொகுதியை கேட்டேனா.. ராகுலுடன் நான் பேசியது என்ன?.. துரை வைகோ
ஈரோடு: காங்கிரஸ் எம்பியும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்த போது நான் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை கேட்டேனா என்பது குறித்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார்.
மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கு பின்னர் நேற்றைய தினம் ஈரோட்டில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் சமூகத்துக்காகவும் தமிழர் நலன் , தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீத வெற்றியை பெற்றுள்ளார்.
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ
தெலுங்கானாவில் ராகுல் காந்தி
தெலுங்கானாவில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தார். அப்போது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினோம்.
பிரச்சினைகள்
இப்படி தேசிய அளவிலான அரசியலில் உள்ள பிரச்சினைகளை குறித்து பேசினோம். ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராகுல் காந்தியை பார்க்க சென்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தவறு.
ரூ 3 உயர்வு
நான் எந்த தொகுதியை பெறுவதற்காகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பால் வணிகர்களுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல்
மதிமுக தலைமை கழக செயலாளராக அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் வெளியேறிவிட்டனர். சிலர் கண்டனங்களை தெரிவித்தனர். வாரிசு அரசியலை எதிர்த்துதான் திமுகவிலிருந்து விலகிய வைகோ மதிமுகவை தொடங்கினார். அப்படியிருக்கும் போது வைகோவே அவருடைய மகனுக்கு முக்கிய பதவியை தரலாமா என்ற கேள்வி எழுந்தது. துரை வைகோ தனது கட்சியினருக்கு சில எச்சரிக்கை விடுத்துள்ளார். அது போல் அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.