எடப்பாடி கேட்ட "இரண்டுமே" கிடைக்கல.. ஓபிஎஸ் ஜீரோ இல்லை.. புட்டு புட்டு வைத்த புள்ளி.. என்னாச்சு?
ஓபிஎஸ் தோல்வி அடைந்துவிட்டதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள், ஆனால் அது உண்மை இல்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி வைத்த இரண்டு முக்கிய கோரிக்கைகளும் அவருக்கு கிடைக்கவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை இது தொடர்பாக அளித்த பேட்டியில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன். ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் இந்த நிலைப்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவில் நடந்த மொத்த நிகழ்வும் இந்த இடைத்தேர்தலை மையமாக வைத்து நடத்தப்பட்டது. ஏற்கனவே தோல்வி அடைந்த அணி மேலும் சிதறுவதை விரும்பாமல் இந்த முடிவு செய்துள்ளனர். அதிமுக சிதறினால் மேலும் வாக்குகள் சிதறும். அப்படி நடந்தால் அது பாஜகவிற்கும் சிக்கல்தான். அந்த புள்ளியில்தான் தற்போது பாஜக நகர்ந்து கொண்டு இருக்கிறது. பன்னீர்செல்வத்தை ஜீரோ என்று ஆக்க கூடிய முயற்சியில் எடப்பாடி தோல்வி அடைந்துவிட்டார் என்றுதான் நான் கூறுவேன். இந்த ஒரு சீட்டிற்காக சண்டை போட கூடாது என்பதால் இறங்கி போகலாம் என்று பன்னீர்செல்வத்திற்கு எண்ணம் இருக்கிறது.

பாஜக போட்டி
இந்த இடத்திற்குள்தான் பாஜகவும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போதே இவர்கள் பிரிந்துவிட்டால் 2024 தேர்தலில் சிக்கல் ஆகும் என்று பாஜகவும் இவர்களை இணைக்க முயன்று உள்ளது. ஓபிஎஸ் இறங்கி வந்துவிட்டதாக சிலர் கூறுவார்கள். ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ள கூடாது. ஒரு சீட்டிற்காக இப்போது மோதி அனைத்தையும் இழக்க கூடாது என்பதால் ஓபிஎஸ் இறங்கி வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வெற்றியாக இதை கருத முடியாது. இன்னும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒப்புக்கொள்ளவில்லை.

கையெழுத்து போடும் உரிமை
அதேபோல் இரட்டை இலையில் கையெழுத்து போடும் உரிமையையும் எடப்பாடிக்கு கொடுக்கவில்லை. அவர் கேட்ட இரண்டும் கிடைக்கவில்லை. சின்னம் முடங்காமல் புதிய வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். இரட்டை இல்லை தமிழ் மகன் கையில் போனது வேண்டுமானால் கொஞ்சம் எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இது இறுதி முடிவு இல்லையே. ஓபிஎஸ் தோல்வி அடைந்துவிட்டதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். தலை இருக்கும் போது சில வால்கள் ஆடுகின்றன. எடப்பாடி இதை பேசட்டும். ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார் என்று எடப்பாடி சொல்லட்டும்.

வால் ஆட கூடாது
தலை இருக்க வால் ஆட கூடாது . எடப்பாடி மௌனமாகவே இருக்கிறார். ஒற்றை தலைமை ஆகி மோடியை ஏமாற்றிவிடலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் அதற்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மோடியை ஏமாற்ற எடப்பாடி திட்டம் போட்டுகொண்டு இருக்கிறார். இந்த தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் நிறுத்திய வேட்பாளர்தான் சரியான வேட்பாளர். சுப்ரீம் கோர்ட் இதில் இரட்டை இலை உடைய விரும்பவில்லை. அதனால் அவர்கள் ஒரு விதமான தீர்ப்பை கொடுத்துள்ளனர். எல்லோராலும் ஆதரிக்க கூடிய தீர்ப்பாக இவர்கள் வழங்கி உள்ளனர்.

எடப்பாடி
எடப்பாடிக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. அவருக்கு எம்எல்ஏக்கள் சப்போர்ட் உள்ளது. அதேபோல் மாவட்ட செயலாளர்கள் சப்போர்ட் உள்ளது. அதனால் அவரின் வேட்பாளரை பாஜக ஆதரிக்க நினைக்கிறது. அதற்காக ஓ பன்னீர்செல்வம் ஆதரவு குறைந்தவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள், மக்கள் ஆதரவு உள்ளது. அது எடப்பாடிக்கு இப்போது புரியாது. 2024 லோக்சபா தேர்தலில் இது புரியும், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications