விலையில்லா வேட்டி, சேலை திட்டம் முடக்கமா? அதிமுகவின் திட்டமிட்ட பொய்.. அமைச்சர் காந்தி விளக்கம்!
விலையில்லா வேட்டி சேலை திட்டம் பற்றி அமைச்சர் காந்தி விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: விலையில்லா வேட்டி, சேலை திட்டம் முடக்கப்படவில்லை என்றும், அதிமுகவினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். அதேபோல் மக்களுக்கு தரமான வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏதாவது குறை சொல்லும் வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் குறை கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழ்நாடு அமைச்சர்கள் தெரு தெருவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு மற்றும் ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்திடம் ஆதரவு கோரி அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, முத்துசாமி, காந்தி, அன்பரசன், மெய்யநாதன், மூர்த்தி ஆகியோர் ஆதரவு கோரினர்.

அமைச்சர் காந்தி
அப்போது விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் விசைத்தறி தொழில் அழிவுப்பாதையை நோக்கி செல்வதாகவும், கொரோனா, பணவீக்கம், ஆட்டோ லூம் விசைத்தறியால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்களிடம் எடுத்துரைத்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் காந்தி பேசுகையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தரமான விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது.

கோரிக்கைகள்
அதை விசைத்தறி தொழிலாளர்கள் தரமாக செய்துள்ளார்கள். அதேபோல் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரால் தான் நிறைவேற்ற முடியும். அவரை தவிர வேறு யாராலும் நிறைவேற்ற முடியாது. விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார்.

அதிமுக மீது விமர்சனம்
அதிமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.154 கோடி கடன் வழங்கி இருக்கோம். கடனை அடைப்பதற்காக அரசாணையும் வெளியிட்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு அமைந்த பின் விசைத்தறி உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையில் 70 சதவிகிதம் நிறைவேற்றி உள்ளோம். அதிமுகவினர் குறை சொல்லும் வேண்டும் என்பதற்காக குறை கூறி வருகின்றனர்.

வேட்டி சேலை திட்டம் முடக்கமா?
விலையில்லா வேஷ்டி, சேலைகள் எப்போதும் இல்லாதவாறு தரமாக வழங்கப்பட்டுள்ளது. 2013-14 ஆண்டுகளில் அதிமுகவினர் வேஷ்டி , சேலையை பிப்ரவரிக்குள் வழங்க வேண்டியதை ஆகஸ்டில் வழங்கினர். வேட்டி, சேலை வழங்குவதில் அதிமுகவினர் விஷயம் தெரியமால் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேஷ்டி சேலை திட்டம் முடக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications