மீண்டும் உரசல்.. “மற்றவர்கள்” முடிவு செய்ய முடியாது.. சீண்டிய அதிமுக சீனியர்! பேரை கூட சொல்லலையே!
ஈரோடு : அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்கிற ரீதியில் அண்ணாமலை பேசியது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இதனால், பாஜக அதிமுக கூட்டணி பிளவு பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. இதுகுறித்துப் பேசியுள்ள அதிமுக சீனியர் தலைவர் செங்கோட்டையன், கூட்டணியை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள்." என ஆவேசமாகப் பேசினார்.

அண்ணாமலை - அதிமுக மோதல் : அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடராதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இதனால் பாஜக உடனான கூட்டணிக்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூறமுடியாது." என்றார்.
மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் அதிக சீட் பெறுவதற்காக அதிமுகவை பயமுறுத்த அண்ணாமலை அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், "அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை." எனக் கூறினார்.
அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜக உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது என்றார் செங்கோட்டையன். மேலும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் எனத் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications