எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவு எந்த அணிக்கு.. அவங்களுக்குத்தான் அதிக சான்சாமே?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் யாருக்கு அந்த கட்சி ஆதரவு கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.
இன்னொரு பக்கம் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பாஜகவின் நிலைப்பாட்டில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‛அழுகை’.. காங்கிரஸிடம் சீட் கேட்டு கண்கலங்கிய மக்கள் ராஜன்..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உருக்கம்
பேட்டி
இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்குமா? ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக இதில் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தெளிவாக இருக்கிறார். அதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் மோடிக்கு அதே ஆதரவை எடப்பாடி தருவது இல்லை. எடப்பாடியை பாஜக இதனால் முழுமையாக நம்பவில்லை. அது எடப்பாடியின் தனிப்பட்ட நிலைபாடாக இருக்கலாம். மோடியா? எடப்பாடியா? என்று அவர் கேட்கலாம். எடப்பாடி வேண்டுமென்றால் சந்திரசேகர ராவையோ, அரவிந்த் கேஜ்ரிவாலையோ ஆதரிக்கலாம்.
ரவீந்திரன் துரைசாமி
இப்படிப்பட்ட நிலையில் பாஜக யாரை ஆதரிக்கும் என்று பாருங்கள்? அப்படி இருக்கும் போது எடப்பாடியை ஆதரிப்பதற்கு பாஜக யோசிக்காதா? எடப்பாடியை மோடியை ஏமாற்றிவிட்டு வெளியே போய்விட்டார் என்ன செய்வார்கள். எடப்பாடி போன்று பலரை பார்த்தவர்கள் பாஜகவினர். இதனால் எடப்பாடியிடம் பாஜக கவனமாகவே இருக்கும். எடப்பாடி பன்னீரை விட பவர்புல்லாகவே இருக்கிறார். இருந்தாலும் அவரிடம் பாஜக கவனமாகவே இருக்கும். இதனால் ஓபிஎஸ் பக்கம் பாஜக போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதிமுக
ஈரோடு கிழக்கு தேர்தலில் தனியாக நிற்கலாம் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துவிட்டார். அவர் எடுத்தது ஹை ரிஸ்க். சமூக நீதி சூறையாடல் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. வெள்ளாள கவுண்டர்கள் தவிர மற்ற ஜாதியினர் எடப்பாடி மீது கோபத்தில் இருக்கின்றனர். ஸ்டாலின் vs எடப்பாடி என்ற நிலைமை இப்போது இல்லை. ஸ்டாலின் vs மற்றவர்கள் என்ற நிலைதான் உள்ளது. இங்கே திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் 2026ன் முதல்வர் வேட்பாளர். ஆனால் எதிர் தரப்பில் அப்படி யாரும் இல்லை. எடப்பாடி பழனிசாமி பெரிய போர்ஸ்தான்.
பாஜக
ஆனால் எடப்பாடிதான் 2026க்கான முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தல் என்பது முதல்வர் வேட்பாளருக்கான போட்டிதான். ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின்தான் திமுகவின் 2026 முதல்வர் வேட்பாளர். எதிர் அணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்க போகிறது. எடப்பாடியா? ஓ பன்னீர்செல்வமா? யார் ஆளுமை மிக்கவர்கள் என்பதை காட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க போகிறது. இதை வைத்தே 2026ல் அவர்களின் எதிர்காலம் என்ன என்று தெரியும். எடப்பாடி இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவிற்கு தான்தான் மாற்று என்று காட்ட திட்டமிட்டு இருந்தார். அதை தடுக்கும் விதமாக தற்போது ஓ பன்னீர்செல்வமும் தற்போது கால் பதித்து உள்ளார்.
மோடி எடப்பாடி
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களில் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. வலுவான கட்சிகள் கூட தோல்வி அடைந்து இருக்கின்றன. அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதே பென்னாகரத்தில் தோல்வி அடைந்தது. ஆர். கே நகரில் தோல்வி அடைந்தது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு பர்கூரில் ஜெயலலிதா கூட தோல்வி அடைந்தார். தற்போது அதே அதிமுகவில் உட்கட்சி மோதல் வேறு நிலவுகிறது. சின்னத்திற்கு வேறு சிக்கல் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.