நேரடியாக தலையிட்ட ஜெகன் மோகன் ரெட்டி! மிரட்டி பணம் பறித்த வழக்கில்.. உறவினரை கைது செய்ய உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
“ஹிட்லர் கதி இதுதான்” - அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஒய்.எஸ்.கொண்டா ரெட்டி, அங்குள்ள கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் டெண்டருக்கு மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திரா
அந்த கட்டுமான நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மிக முக்கிய பாஜக தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் என்று கூறப்படுகிறது. கடப்பாவில் முதல்வரின் புலிவெந்துலா தொகுதியில் உள்ள வேம்பள்ளி- ராயச்சோட்டி சாலையை மேம்படுத்தும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரரிடம் தான் ஒய்.எஸ். கொண்டா ரெட்டி பணம் பறித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பேசுபொருள் ஆன நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி கொண்டா ரெட்டி கைது செய்யப்பட்டார். சொந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஆந்திரா முதல்வர் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள கொண்டா ரெட்டி, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்று கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் இந்த விவகாரத்தில் யாரையும் தப்பிக்க விட மாட்டோம் என்றும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெகன் உத்தரவின் பேரில் சக்ராயப்பேட்டை போலீசார் கொண்டா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கைது
கொண்டா ரெட்டியின் ஃபோன்கால் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து ஆய்வு நடத்தினர். அதில் அவர் சமீப நாட்களில் கட்டுமான நிறுவன ஊழியர்களைப் பல முறை அழைத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று அவர் அவர் கைது செய்யப்பட்டார். கொண்டா ரெட்டி அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
என்ன நடந்தது
இதுகுறித்து கடப்பா காவல் கண்காணிப்பாளர் கே.கே.அன்புராஜன் கூறுகையில், "கொண்டா ரெட்டி, கடந்த மே 5ஆம் தேதி ஒப்பந்ததாரரை அழைத்து லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்காவிட்டால், அரசின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலையை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டினார். கொண்டா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தோம். அதன்படி, அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.