மணமகளுக்கு உடல்நலம் பாதிப்பு.. ஆஸ்பத்திரியிலேயே.. மணமகன் எடுத்த முடிவு.. தெலுங்கானாவில் நெகிழ்ச்சி
தெலுங்கானாவில் மணப்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், ஆஸ்பத்திரி வார்டில் வைத்தே மணமகன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் திட்டமிட்டபடி நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திட்டமிட்ட நாளில் கரம் பிடிக்க முடிவு செய்த மணமகன் மருத்துவமனை வார்டிலேயே திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் நடக்குமா? நடக்காதா? என மணமகள் பெற்றோர் கலங்கி போயிருந்தனர்.
இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை எந்த காரணத்தை கொண்டும் கைவிடப் போவது இல்லை என முடிவு செய்து மருத்துவமனைக்கே சென்று மணப்பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -

களை கட்டிய திருமண ஏற்பாடுகள்
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியானா மாவட்டத்தை சேர்ந்தவர் சைலஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சைலஜா ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் திருமணத்திற்காக பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். திருமணத்திற்கு ஒருநாளே இருந்ததால் திருமண ஏற்பாடுகள் களை கட்டியிருந்தது.

ஒரு நாளே எஞ்சியிருந்த நிலையில்..
நெருங்கிய உறவினர்களும் வீட்டிற்கு வரத்தொடங்கினர். திருமண வீடு களை கட்டியிருந்த நேரத்தில் திடீரென்று மணப்பெண் சைலஜாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சைலஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு சைலஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்படி அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. திருமணத்திற்கு ஒரு நாளே எஞ்சியிருந்த நிலையில், மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் திருமணம் நின்று போகும் சூழல் உருவானது.

மருத்துவமனையில் வைத்தே திருமணம்
இதனால், ஷைலஜா மற்றும் அவரது பெற்றோர் கலங்கி போகினர். மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதால் திருமணத்தை ரத்துதான் செய்ய வேண்டுமோ என எண்ணி மிகுந்த மன வேதனையுடன் ஷைலஜா பெற்றோர் இருந்தனர். மணமகன் வீட்டினரை அணுகிய போது மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்து கொள்ள மணமகன் முடிவு செய்தார். திருமணத்திற்காக ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டது.

மண்டபம் போல மாறிய வார்டு
திருமணத்தை தள்ளிவைத்து மீண்டும் ஏற்பாடு செய்தால் தேவையற்ற செலவுதான் ஏற்படும் என்று எண்ணிய மணமகன் திருமணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதைக்கேட்ட ஷைலஜா வீட்டினரும் மகிழ்ச்சி அடைந்ததோடு மருத்துவமனை நிர்வாகத்தினருடன் இது தொடர்பாக பேசினர். மருத்துவமனை வார்டிலேயே திருமண சடங்குகள் நடைபெறுவதற்கு அனுமதி கொடுத்த மருத்துவமனை நிர்வாகம் மணமக்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வார்டையே திருமண மண்டபம் போல அலங்கரித்தும் வைத்து இருந்தது.

மாப்பிள்ளையை பாராட்டிய உறவினர்கள்
அதன்படி நிச்சயிக்கப்பட்ட தினத்திலேயே சைலஜா - திருப்பதி ஜோடிக்கு மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களே இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மருத்துவமனையில் இருந்த நர்சுகள், டாக்டர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு பரிசுகளையும் வழங்கினர். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கலங்கி போன ஷைலஜாவை எந்த தயக்கமும் இன்றி கரம் பிடித்த திருப்பதியின் செயலை உறவினர்கள் பாரட்டினர். ஷைலாஜாவும் ஆனந்தக்கண்ணீருடன் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications