தெலுங்கானா சட்டசபை தேர்தல்: மகளிருக்கு மாதம் ரூ.2,500, இலவச பஸ் பயணம்.. காங் தேர்தல் அறிக்கை
ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 நிதி உதவி, இலவச பஸ் பயணம் என கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உதயாமனது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

எனினும், பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பிஆர்.எஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 6 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உடன் பேசிய கார்கே, கங்கிரஸ் கட்சிக்கு பகவத் கீதை, குரான், பைபிள் போன்று புனிதமானது. எனவே வாக்குறுதியை நிறைவேற்றுவோம். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஆறு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் வருமாறு:-
* மகளிருக்கு மாதம் தோறும் 2,500 நிதி உதவி, 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் மற்றும் பேருந்துகளில் இலவச பயணம் ஆகிய சலுகைகள் மகாலாட்சுமி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
* க்ருக ஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும்.
* சொந்தமாக வீடு இல்லாத குடும்பங்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்டுவதற்காக ரூ.லட்சம் நிதி ஆகியவை வழங்கப்படும்.
* யுவ விகாசம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
* தெலுங்கானா இயக்கத்திற்காக போராடியவர்களுக்கு 250 சதுர அடி கொண்ட வீட்டு மனை வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள், கணவரை இழந்தவர்கள், தனியாக வாழும் பெண்கள், நெசவாளர்கள், பீடி தொழிலாளர்கள், உள்ளிட்டோருக்கு ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும்.
* ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹெல்த் இன்ஸூரன்ஸ் வழங்கப்படும். ஆகிய கவர்ச்சிகர வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications