நடிகர் நாகர்ஜுனா கட்டிடம் இடிப்பு.. "பகவான் கிருஷ்ணர் தான் காரணம்.." தெலுங்கானா முதல்வர் பரபர
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கன்வெக்ஷன் சென்டர் ஏரி நிலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கிருஷ்ணரின் போதனைகளின்படியே தனது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், எவ்வளவு அழுத்தம் வந்தாலும் அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் நிச்சயம் அகற்றப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி பகுதியில் நடிகர் நாகர்ஜுனா சொந்தமான கன்வெக்ஷன் சென்டர் இருக்கிறது. ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அம்மாநில அதிகாரிகள் நேற்று இந்தக் கட்டிடத்தை இடித்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது பகவத் கீதையில் கிருஷ்ணரின் போதனைகளின்படியே நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கன்வெக்ஷன் சென்டர் இடிக்கப்பட்டதாகவும் அது சரியான நடவடிக்கை தான் என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மேலும், ஏரி குளங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், தனது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தெலுங்கானாவில் ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க தனக்கு உத்வேகம் அளித்ததே பகவத் கீதை தான் என்று கூறினார். போரில் ஈடுபட்டாலும், அதர்மத்தை முறியடிக்க மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் போதித்து இருப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, "பகவான் கிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்றியே காங்கிரஸ் அரசு ஹைத்ரா (ஹைதராபாத் பேரிடர் மற்றும் சொத்துக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மையம்) மூலம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்களை இடித்து வருகிறது.
பெரும்பாலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களைச் செல்வாக்கு மிக்கவர்கள் தான் கட்டியிருக்கிறார்கள். எனவே, அரசுக்கு அழுத்தம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்காக நாங்கள் எங்கள் பணியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. நாங்கள் எடுக்கும் நடவடிக்கை எதிர்கால தலைமுறையைக் காப்பதற்கான செயல்.. பகவான் கிருஷ்ணர் சொன்னது போலத் தர்மம் வெல்ல வேண்டும், அதர்மம் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.
ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டி அருகே தம்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கன்வெக்ஷன் சென்டர் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ஹைட்ரா, நகர திட்டமிடல், நீர்ப்பாசனம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து நேற்று இந்த கன்வெக்ஷன் சென்டரை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்குள் ஆந்திர ஐகோர்ட் இதற்கு இடைக்காலத் தடை விதித்ததால் கட்டிடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் நாகர்ஜுனா, அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சாடினார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எந்தவொரு நோட்டீஸும் இல்லாமல் அதிகாரிகள் தனது கட்டிடத்தை இடித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் தனக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்தால், கட்டிடத்தைத் தானே இடித்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் தனது கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications