கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து.. 3 தமிழர்கள் உட்பட 14 பேர் பலி! இரவு நேரத்தில் கோரச் சம்பவம்!
கொல்கத்தா: கொல்கத்தா ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் குழந்தைகள், மாமனார் என 3 பேர் பலியாகி உள்ளனர்.
கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க, பலர் ஜன்னல் வழியாக குதித்து உள்ளனர்.

இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் 2 குழந்தைகள், பிரபுவின் மாமனார் என 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலியாகியுள்ளனர்.
இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த தீ விபத்து இரவு 8:15 மணியளவில் ரிதுராஜ் ஓட்டல் வளாகத்தில் நடந்தது. மீட்புப் பணியில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பலர் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையின் கடும் முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை சீல் வைத்து முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். சிறப்புக் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications