"இரு தமிழர்கள் பலி.." அதிர வைத்த தானே கிரேன் விபத்து! அதிகாலையில் நடந்தது என்ன
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நெடுஞ்சாலை பணிகளின் போது ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் தமிழர்கள் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தானே அடுத்துள்ள ஷாஹாபூரில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வந்தது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்தது.
இன்று அதிகாலை ஷாஹாபூரின் சர்லம்பே என்ற கிராமத்திற்கு அருகில் இந்த சாலையை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதற்காக பல்வேறு ஊழியர்கள் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கிரேன் விபத்து: நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் ஒரு கட்டமாக அங்கு மேம்பால பணிகள் நடந்து வந்தது. அப்போது அங்கிருந்த ராட்சத கிரேன், விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில், உயிரிழப்பு 17ஆக அதிகரித்தது. இந்த விபத்து 1.30 மணியளவில் நடந்துள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் தமிழர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டுமான பணிகளின் போது இந்த கிரேன் விபத்து நடந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் விஎஸ்எல் என்ற கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த சந்தோஷ் என்பதும் தெரிய வந்துள்ளது. அதேபோல இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
எப்படி விபத்து நடந்தது: இன்று அதிகாலை இங்கே வழக்கம் போல கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கிரேன் சரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை என்ற போதிலும் பலரும் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் விபத்து ரொம்ப மோசமானதாக இருந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிரேன் விபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது எந்த சாலை: 710 கிமீ நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலை மகாராஷ்டிராவின் இரு முக்கிய நகரங்களான மும்பை-நாக்பூர் நகரங்களை இணைக்கிறது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் சார்பில் இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த விபத்தால் வேதனை அடைந்தேன் என்று குறிப்பிட்ட அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ₹ 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 வழங்கப்படும் என்றார்
அதேபோல மகாராஷ்டிரா அரசு சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications