ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமானது... கொல்கத்தா துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அறிக்கை
கொல்கத்தா: கொல்கத்தாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்ட சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான செயல் என தனது அறிக்கையில் நீதிபதி சுஷாந்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். அந்தச் சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டை வேண்டி இளைஞர் காங்கிரசார் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 2011ம் ஆண்டு மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்ற மம்தா, இளைஞர் காங்கிரசார் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி சுஷாந்தா சாட்டர்ஜியைக் கொண்ட ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட பல இடதுசாரித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி சுஷாந்தா சாட்டர்ஜி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசம்...
கொல்கத்தாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான செயல். அந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு காவல் துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளும், அப்போதைய உள்துறை அமைச்சகமும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

டெல்லி பலாத்கார சம்பவம்...
டெல்லியில் மருத்துவ மாணவி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து மட்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

அரசியல் ஆதாயம்...
அதுபோன்ற சூழல்தான் 1993-இல் ஏற்பட்டது. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நிவாரணம் தேவை...
இந்தச் சம்பவத்தால் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. எனவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என இவ்வாறு தனது 700 பக்க அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications