வாரணாசி வாக்காளர்களில் 2,500 நரேந்திரா, 3,600 அரவிந்த்கள்
வாரனாசி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரனாசியில் 2 ஆயிரத்து 500 நரேந்திராக்கள் மற்றும் 3 ஆயிரத்து 600 அரவிந்த்கள் வாக்களிக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் வாரனாசியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் கைலாஷ் நாத் சவ்ராசியா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹிராலால் யாதவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் தவிர திரிணாமூல் காங்கிரஸின் இந்திரா திவாரி, சிறு சிறு கட்சிகளை சேர்ந்த 16 பேர் மற்றும் சுயேச்சைகள் 20 பேர் களத்தில் உள்ளனர். 16 லட்சம் வாக்காளர்கள் உள்ள வாரனாசியில் 42 பேர் போட்டியிடுகிறார்கள்.
வாரனாசியில் உள்ள வாக்காளர்களில் 2 ஆயிரத்து 500 பேரின் முதல் பெயர் நரேந்திரா. மேலும் 3 ஆயிரத்து 600 பேரின் முதல் பெயர் அரவிந்த். ஆனால் எந்த வாக்காளர் பெயரும் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் என்று இல்லை. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயின் பெயரில் 15 வாக்காளர்கள் உள்ளனர். அஜய் என்ற முதல் பெயர் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 16 ஆயிரம்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான விஜய்யின் பெயரில் மட்டும் 17 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications