2 குழந்தைகளின் தாயைக் கொன்று சடலத்துடன் உறவு கொண்ட காமுகர்கள்.. பெங்களூருவில் பயங்கரம்!
பெங்களூரு: பெங்களூருவில் முன் விரோதம் காரணமாக இரண்டு குழந்தைகளின் தாயைக் கொன்று, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட இரண்டு காமுகர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் பானி பூரிக் கடை நடத்தி வருபவர் சஞ்சய். இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி ஊர்மிளாவுடன் வசித்து வந்தார்.
சஞ்சய் கடையில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜீவ் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்ற ராஜீவிற்கு சஞ்சய் ரூ. 7500 சம்பள பாக்கி தர வேண்டுமாம்.
இந்தப் பணத்தை வசூலிப்பதற்காக கடந்த மாதம் 15ம் தேதி சுரேஷின் வீட்டிற்கு ராஜீவ் தனது நண்பர் ஷ்யாம் என்பவருடன் சென்றுள்ளார். ஒரு வேளை சஞ்சய் பணத்தை கொடுக்க மறுத்தால், அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை திருடிவிட வேண்டும் என திட்டமிட்டு அவர்கள் இருவரும் அங்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் சஞ்சய் அங்கு இல்லை. அவருடைய மனைவியும் குழந்தைகளும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜீவும், ஷ்யாமும் வீட்டைக் கொள்ளையடித்ததோடு ஊர்மிளாவையும் கொலை செய்தனர். பின்னர் அப்பெண்ணின் சடலத்துடன் அவர்கள் உறவு கொண்டுள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராஜீவையும், ஷ்யாமையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜிவ் மற்றும் ஷ்யாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராஜீவ் மற்றும் ஷ்யாம் இருவருக்கும், 'நெக்ரோபிலியா' எனப்படும் பிணங்களுடன் உறவு கொள்ளும் மன நோய் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.