சத்தீஸ்கரில் 200 மாவோயிஸ்டுகள் திரண்டு தாக்குதல்- 20 பாதுகாப்பு படையினர் பலி!!
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டிய மிகப் பெரும்தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 16 பேர் உட்பட 20 வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள சுக்மா மாவட்டம் தோங்பாலில் மத்திய ரிசர்வ் படையினர் அம்மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரை குறி வைத்து கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிக்கி 16 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் உயிர் தப்பிய பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில்தான் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.