ரம்ஜான் அன்று 3 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்ட டெல்லி சல்மான் கான்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜோதி நகரில் பொதுமக்கள் முன்னிலையில் 22 வயது வாலிபரை 3 பேர் சேர்ந்து குத்திக் கொலை செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஜாகிர் நகரில் தனது 5 சகோதர, சகோதரிகள், பெற்றோருடன் வசித்து வந்தவர் சல்மான் கான்(22 வயது). அவருடைய தந்தைய நையுல்லா கான் பொறியியல் கல்லூரி ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். சல்மானும், அவரது அண்ணன் ஆமீரும்(24) தந்தைக்கு உதவியாக கேன்டீனில் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சல்மான் டெல்லி ஜோதி நகரில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அன்று மாலை அவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றபோது அவர் தனது பைக் அருகில் நின்றுள்ளார். அப்போது ஒரு பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் பைக்கை நிறுத்துகையில் சல்மானின் கால் மீது வாகனத்தை வைத்து இடித்துள்ளனர். மேலும் அவரின் பைக் மீது அந்த 3 பேர் தங்களின் பைக்கை இடித்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட சல்மானுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சல்மானை இரண்டு முறை குத்தினார். பிறகு அந்த 3 பேரும் பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த சல்மான் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட்டில் நடந்த இந்த கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications