உ.பி.யில் அக்கிரமம்.. 65 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர்... உயிரிழந்தார் மூதாட்டி!
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் காஸிப்பூர் மாவட்டத்தில் 65 வயது மூதாட்டியை ஒரு கும்பல் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மாநிலத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபூல்மணி (65) என்ற மூதாட்டி. இவர் பல வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ராம்விருக்ஷ் குஷ்வாஹாவுடன் உ.பிக்கு இடம் பெயர்ந்து வந்தார். அங்கு, காஸிப்பூர் மாவட்டத்தில் உள்ள சஹரன்சட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலையில் சேர்ந்தார். பல வருடமாக இந்த சூளையில்தான் அவர் வேலை பார்த்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு இந்த சூளையை மூடி விட்டனர். இருப்பினும் அந்த கிராமத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே வசித்து வந்தார் ஃபூல்மணி. கடந்த வருடம் அவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து புதிராம் குஷ்வாஹா என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார் ஃபூல்மணி.
ஃபூல்மணி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தாராம். இதை வாங்கிச் சாப்பிட சிலர் தொடர்ந்து வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து ஃபூல்மணியும் சாராயம் குடிப்பாராம். இதுபோல கள்ளச்சாராயம் குடிக்க வந்த சிலர் சேர்ந்து ஃபூல்மணியை, அவர் குடிபோதையில் இருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். பின்னர் அவரை அரை நிர்வாண கோலத்தில் விட்டு விட்டு தப்பி விட்டனர்.
அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் ஃபூல்மணி உயிரிழந்து போனார். நேற்றுதான் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி அவர்கள் விசாரணை செய்ததில் பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்தர்கள், ஃபூல்மணியின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியிருந்ததையும் கண்டுபிடித்தனர். இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியதால்தான் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
நான்கு பேர் கொண்ட கும்பல்தான் இதைச் செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.