சுற்றுலா வந்த இடத்தில் குதிரையிலிருந்து விழுந்து 7 வயது இங்கிலாந்து சிறுமி பலி!
மும்பை: மகாராஷ்டிராவில் சுற்றுலா வந்திருந்த 7 வயது இங்கிலாந்து சிறுமி குதிரைச் சவாரி செய்த போது, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டம், மாதரென் மலை வாசஸ்தலத்திற்கு இங்கிலாந்து குடும்பம் ஒன்று சுற்றுலா வந்திருந்தனர். அக்குடும்பத்தில் இருந்த 7 வயது சிறுமி ஒருவர் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதன்படி சிறுமி மட்டும் தனியாக குதிரைச் சவாரி செய்துள்ளார்.
அப்போது முரண்டு பிடித்த குதிரை தறிகெட்டு ஓடியது. இதில், சிறுமி குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். சுமார் 300 அடி தூரம் வரை சிறுமியின் உடலை குதிரை இழுத்து சென்றது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராய்காட் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மும்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குதிரை உரிமையாளர் மீது சிறுமியின் தந்தை புகார் ஏதும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியுடன் அவரது தந்தை கோவின் மார்க் மெவஹ் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர். கோவின், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.












Click it and Unblock the Notifications