ஆதார் அவசியமா இல்லையா?... நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஆதார் கார்டை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
டெல்லி: ஆதார் கார்டு தனி நபர் தகவல் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரசணை நடத்தியது. இதன் இறுதித்தீர்ப்பு நாளை வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேஸ் இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் பென்சன் உள்ளிட்ட பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆதார் கார்டு முறை தனிநபர் தகவல்கள் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தனி நபர் ரகசியம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 பேர் அடங்கிய அமர்வு விசாரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.
தனி நபர் ரகசிய உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வராது என்று ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் தனிநபர் தகவல் ரகசியத் தன்மை பாதுகாப்பு என்பது குடிமகன்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
தனிநபர் சார்ந்த தகவல் ரகசியத்தன்மை என்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என ஏற்கனவே கடந்த வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருந்தனர்.
எல்லா சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்படுவது மக்களை அதிகமாக சிரமப்படுத்துவதோடு மட்டுமல்லமால் தேவையில்லாத குழப்பங்களையும் உருவாக்குகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று உச்சநீதிமன்றம் அளிக்கும் இந்த தீர்ப்பானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.