உ.பி: ஓட்டுப்போட முடியலையே… விரக்தியில் தீக்குளித்து சாவு
லக்னௌ: உத்தர பிரதேசத்தில் இன்று வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசத்தின் ஆவோன்லா லோக்சபா தொகுதிக்குட்பட்ட தேவ்சரா ராம் பரோஸ் லால் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஹரி சிங் (40) என்ற நபர் தனது மனைவி தாரா தேவியுடன் வாக்களிக்க வந்தார்.
பூத்சிலிப்பில் பெயர் இருந்தும் தேர்தல் அதிகாரிகளால் அவரது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று முறை முயற்சி செய்தும் அவரால் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் வேதனையடைந்த அவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது எதிர்பாராத நிகழ்வு என்று உத்தரபிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறியுள்ளார்.