கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்.. கேரளாவில் பயங்கரம்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய், தந்தை மற்றும் மகளை பெண் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் பல வாலிபர்களுடன் கள்ளக்காதல் கொள்ள இடையூறாக இருந்த தாய், தந்தை மற்றும் மகளை பெண் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலச்சேரி பினராய் பகுதியை சேர்ந்தவர்கள் குஞ்சிகண்ணன் - கமலா தம்பதி. இவர்களது மகள் சவுமியா.
சவுமியாவுக்கு திருமணமாகி ஐஸ்வர்யா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் சவுமியா அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சில வாலிபர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த விஷயத்தை அறிந்த அவரது கணவர் சவுமியாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அடங்காத சவுமியா தொடர்ந்து தனது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். இதனால் சவுமியாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அடுத்தடுத்து மரணம்
இதையடுத்து சவுமியா தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இளைய மகள் கீர்த்தனா திடீரென இறந்து விட்டார். கீர்த்தனா, உடல் நலக்குறைவால் இறந்ததாக சவுமியா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ம் தேதி சவுமியாவின் மகள் ஐஸ்வர்யாவும், மார்ச் 7ம் தேதி சவுமியாவின் தாய் கமலாவும், ஏப்ரல் 13ம் தேதி தந்தை குஞ்சி கண்ணனும் உடல் நல குறைவால் இறந்துள்ளார்கள்.
மருத்துவமனையில் அனுமதி
குடும்பத்தினர் தொடர்ந்து இறந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு கிணற்றில் அமிலத் தன்மை உள்ள தண்ணீர் இருந்ததாகவும், அதை குடித்ததால் மகள் மற்றும் பெற்றோர் இறந்து விட்டதாகவும் கூறி சமாளித்தார் சவுமியா.
ஆனால் 4 பேரின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர், உறவினர்களும், அந்த பகுதியினர் தலச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சவுமியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தலச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
திடுக்கிடும் தகவல்கள்
இது தொடர்பாக போலீசார் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது சவுமியா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்ததால் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கள்ளக்காதலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகள் ஐஸ்வர்யா இடையூறாக இருந்ததால் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டேன் என போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
பொரித்த மீனில் விஷம் வைத்து
அதில் கடந்த பல ஆண்டுகளாகவே தனக்கு அப்பகுதியைச் சேர்ந்த பலருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 2 பேருடன் உல்லாசமாக இருந்ததை மகள் ஐஸ்வர்யா பார்த்துவிட்டார் என்றும் இது குறித்து தாத்தா பாட்டியிடம் கூறியதால் ஆத்திரத்தில் மகளுக்கு பொரித்த மீனில் எலி விஷம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.
மீன்குழம்பில் விஷம்
மேலும் தனது நடவடிக்கையை பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால் அவர்களையும் கொல்ல திட்டமிட்டாதாக கூறிய அவர், கடந்த மார்ச் 7ம் தேதி தாயாருக்கு மீன் குழம்பில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் கிணற்றில் அமிலம் கலந்துள்ளது என்று சமாளித்துள்ளார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்ததில் கிணற்றில் அப்படி எந்த அமிலமும் இல்லை என்பது தெரியவந்தது.
ரசத்தில் விஷம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தந்தைக்கு ரசத்தில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாகவும் சவுமியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சவுமியா குடும்பத்தில் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்வும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். முதல்வருக்கும் புகார் சென்றது.
முதல்வர் உத்தரவு
தனது சொந்த ஊரில் அடுத்தடுத்து மரணம் நடந்தது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் சவுமியா சிக்கினார். சவுமியாவுடன் தொடர்புடைய 2 வாலிபர்கள், விஷம் வாங்கி கொடுத்த ஆட்டோ டிரைவர் என 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் கொலையை சவுமியா மட்டுமே செய்தது தெரியவந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றோர் மற்றும் பெற்ற மகளை கொலை செய்த விவகாரம் கண்ணூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.