"உன்னதமான இந்தியாவின் தூதர்" பொறுப்பில் இருந்து ஆமிர்கான் நீக்கப்படவில்லை.. தொடர்கிறார்
டெல்லி: உன்னதமான இந்தியா என்ற சுற்றுலாத் துறையின் தூதர் பொறுப்பில் இருந்து பாலிவுட் நடிகர் ஆமிர்கானை சுற்றுலாத்துறை அமைச்சகம் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
ஆனால் உண்மையில் அவர் அப்பொறுப்பில் நீடிக்கிறார், நீக்கப்படவில்லை. இதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆமிர்கான் தொடர்பா ஆர்டிஐ தகவலை ஊடகங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
"நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்பதால், வெளிநாட்டுக்குச் சென்று குடியேறலாமா? என்று தனது மனைவி கேள்வி எழுப்புவதாக நடிகர் ஆமிர் கான் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தால் பலத்த சர்ச்சை கிளம்பியது. ஆமிர்கானுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். அப்போதே சுற்றுலா துறையின் 'உன்னதமான இந்தியாவின்' தூதர் பதவியில் இருந்து ஆமிர்கானை நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தன.
இதன் பின்னர் ஆமிர் கான், நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம்; இந்தியராக இருப்பதிலேயே பெருமிதம் கொள்கிறோம் என சமாதானப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சகமானது, உன்னதமான இந்தியா (Incredible India)வின் தூதர் பொறுப்பில் இருந்து ஆமிர் கானை நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.
ஆனால் உண்மையில் ஆமிர்கான் நீக்கப்படவில்லை. அப்பொறுப்பில் அவர் தொடர்கிறார்.
இடிவி உத்தரப் பிரதேஷ் டிவிதான் இந்தக் குழப்பத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டதாகவும். காலையில் அது போட்ட டிவிட்டால்தான் பெரும் குழப்பமாகிப் போனது. அடுத்தடுத்து மற்ற ஊடகங்களும் இதை பிரேக் செய்ய பெரிய பிரளயமாகி விட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா, பிசினஸ் ஸ்டாண்டர்ட் என ஒருவர் விடாமல் அனைவரும் இந்த செய்தியை பிரசுரித்தனர்.
#AamirKhan will contineu as brand ambasdor of incredible india.. pic.twitter.com/iyaWnHvXSU
— Madhurendra kumar (@Madhurendra13) January 6, 2016
உண்மையில் ஆமிர்கான் குறித்த ஒரு ஆர்டிஐ தகவல்தான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறான செய்திக்கு வழி வகுத்து விட்டது. டெல்லியைச் சேர்ந்த உல்லாஸ் என்பவர் சுற்ருலா அமைச்கத்திடம் 2 கேள்விகள் கேட்டிருந்தார் ஆர்டிஐ மூலமாக.
1- ஆமிர்கான் உன்னதமான இந்தியா திட்டத்தின் பிராண்ட் அம்பாசடராக இருக்கிறாரா?
2- சகிப்புத் தன்மை இன்மை கருத்துக்குப் பிறகும் அவர் தொடர்கிறாரா?
இதுதான் அழர் கேட்ட கேள்விகள். இதற்கு முதல் கேள்விக்கு மத்திய சுற்றுலாத்துறை அளித்த பதில் - சுற்றுலாத்துறை அமைச்சகம், நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக மக்களிடையே நடிகர் ஆமிர்கான் நடிப்பில், சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்தலங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாகவும் டிவி விளம்பரங்களை தயாரித்து ஒளிபரப்புகிறது.
2வது கேள்விக்கு அது நேரடியாக பதிலளிக்காமல், இந்தக் கேள்விக்கான பதிலை இன்னொரு அதிகாரியிடம் கேட்குமாறு அது பரிந்துரைத்திருந்தது.
இந்த 2வது பதிலைத்தான் ஆமிர்கான் நீக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் எடுத்துக் கொண்டு விட்டன ஊடகங்கள். நேரடியான பதிலாக அது இல்லாமல் போனதால்தான் என்னமோ நடந்திருக்கிறது என்ற ஊகதத்திற்கு வழி ஏற்பட்டு விட்டது.
இந்தக் குழப்பத்தைத் தீர்க்க மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், ஆமிர்கான் தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திக்கு சுற்றுலாத்துறை மறுப்பு தெரிவிக்கிறது. ஆமிர்கான் தொடர்பான நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆமிர்கான் தொடர்புடைய டிவி விளம்பரங்களை தயாரித்து அளிக்கும் பொறுப்பு மெக்கான் வேர்ல்ட்வைட் நிறுவனத்திற்குத் தரப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதிலும் மாற்றம் இல்லை என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.