‘ஒரு ஓட்டு ஒரு நோட்டு’: பா.ஜ.கவின் புதிய தேர்தல் நன்கொடை வசூல் திட்டம்
டெல்லி: ஆம் ஆத்மி பாணியில், ‘ஒரு ஓட்டு, ஒரு நோட்டு' என்ற புதிய யுக்தியுடன், பூத் வாரியாக மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவுடன் நிதி திரட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வியூகத்தை வகுப்பதற்காக பா.ஜனதா கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பொதுச்செயலாளர் ஆனந்த் குமார் மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தின் இறுதியில், ‘மோடியை பிரதமராக்குவோம்' என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ‘ஒரு ஓட்டு, ஒரு நோட்டு' என்ற புதிய திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, பாஜகத் தொண்டர்கள் பூத் வாரியாக மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவுடன் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, மக்கள் அவரவர் தகுதிக்கேற்ப 10 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை நன்கொடை தரலாம்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் நன்கொடை வசூலித்தது. இதன் மூலம் மக்களை ஆம் ஆத்மிக் கட்சியினர் நேரடியாக சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதுவே, அவர்கள் 28 தொகுதிகளில் வெற்றி பெற உதவியது எனக் கருதப் படுகிறது. எனவே, அதே பாணியை பின்பற்றி இப்போது பா.ஜனதாவும் தேர்தல் களத்தில் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications