அடுத்து மும்பைக்கு குறி வைக்கும் ஆம் ஆத்மி கட்சி
மும்பை: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, 'ஆம் ஆத்மி' கட்சி, தன் கவனத்தை, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்திற்கு திருப்பி உள்ளது.
நடந்து முடிந்த, டெல்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கட்சி தொடங்கி ஒன்பது மாதங்களே ஆன நிலையில், மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ள அக்கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதை அடுத்து, அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, மயாங்க் காந்தி கூறினார். தங்களின் அடுத்த இலக்கு பற்றி மேலும் அவர் கூறியதாவது:
மாற்றத்திற்கு ஓட்டு
டெல்லியில், செயல்பாடற்ற அரசுக்கு எதிராக, மாற்றத்தை விரும்பிய மக்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டளித்து வெற்றியை தந்துள்ளனர். எங்களின் அரசியல் பணிகள், மேலும் விரிவடையும்.
மும்பையில் போட்டி
மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலிலும், போட்டியிட உள்ளோம். அந்த மாநிலத்தில், குறிப்பாக, மும்பையில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
காங்கிரசுக்கு எதிராக
ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான, பா.ஜ., சிவசேனா கட்சிகளின், சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை சேகரித்து வைத்துள்ளோம்.
லோக்சபா தேர்தலில்
லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்த உள்ளது. இது ஆளும் கட்சியினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
6 லோக்சபா தொகுதி
மும்பையில் 36 சட்டமன்ற தொகுதிகளும், 6 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. அனைத்து தொகுதிகளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்கள்
ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தே பிரச்சாரம் செய்கிறோம். ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்திற்கு இளைஞர்களும், சமூக வலைத்தளங்களின் மூலம் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹரியானாவிலும் போட்டி
மேலும், அக்கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான, ஹரியானாவிலும் போட்டியிட, ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications