கருப்புப் பணம் பதுக்கியோரின் முழுப்பட்டியலும் தாக்கல் செய்யப்படும்: அருண் ஜேட்லி
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் முழு விவரமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றிய விவரங்களை வெளியிடுவதில் சிக்கல்கள் இருப்பதாக முன்பு அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அதாவது இரு நாடுகளிடையே இது குறித்து செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி பெயர்களை வெளியிட முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இதனால் மூன்று தொழிலதிபர்கள் பெயர்களை மட்டும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதற்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருக்கும் அனைவரது பெயர்களையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவிட்டது.
இது குறித்து நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறும்போது, வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருக்கும் அனைவரது விவரங்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி, சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் கருப்புப் பண நபர்கள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் பகிரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications