டிவி, ரேடியோவில் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: அரசு தொலைக்காட்சி மற்றும் அகில இந்தியா ரேடியோவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளி்த்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டபேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் அரசு தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியில் தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும் தலா 45 நிமிடமும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திலும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலும் அரசியல் கட்சித்தலைவர்கள் செய்யும் பிரசாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள பிற நிலையங்களும் ஒலிபரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.