மும்பைக்கு வருவீங்க.. உத்தவ் தாக்கரேவை சந்திக்க மாட்டீங்களோ?: அமித்ஷா மீது பாயும் சிவசேனா!!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணியில் 'வெட்டு-குத்து' அமோகமாக அரங்கேறும் நிலை உருவாகி இருக்கிறது. மும்பை பயணம் மேற்கொள்ளும் பாஜக தலைவர் அமித்ஷா, கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரேவை சந்திக்கமாட்டார் என்பதால்தான் இந்த பஞ்சாயத்து அரங்கேற இருக்கிறது.
பாரதிய ஜனதாவின் 'நிரந்தர' கூட்டணியாக இருந்து வருகிறது சிவசேனா. இந்த கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் எழுவதும் பின்னர் வேறுவழியில்லாமல் அடங்கிப் போவதும் வாடிக்கையான ஒன்றுதான்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டது முதலே 'தனி ஆவர்த்தனத்துக்கு' தயார் என்பதுபோல சிவசேனா பாவ்லா காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் மோடி அரசிலும் பங்கேற்றது.
அமைச்சர் பதவிக்காக முறைப்பு
அதே நேரத்தில் கூடுதல் அமைச்சர் பதவி கேட்டு முறைத்துக் கொண்டும் இருந்தது. பின்னர் சிவசேனா சமாதானமானது. இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
யாருக்கு அதிக தொகுதிகள்?
இதில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கின்றன. ஆனால் யாருக்கு அதிகமான தொகுதிகள் என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிராவில் நாங்கள்தான் பெரிய கட்சி.. எங்களுக்கே அதிக தொகுதிகள் என்கிறது சிவசேனா.
கூட்டணி அமையுமா?
ஆனால் தேசிய அளவில் நாங்கள்தான் பெரிய கட்சி.. எங்களுக்கே அதிக தொகுதிகள் என்பது பாஜக வாதம். இதனால் கூட்டணி அமையுமா? தொகுதிகள் சரிபாதியாக பிரிக்கப்படுமா? என்பதில் குழப்பமான நிலைமை நீடித்து வருகிறது.
அமித்ஷாவின் மும்பை வருகை
இந்த நிலையில்தான் பாஜக தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மும்பையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் அமித்ஷா. மும்பையில் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்கிறார். மேலும் வினாநயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
நேரமில்லையோ?
இது சிவசேனாவினரை ஆத்திரமடைய வைத்துள்ளது. மும்பையில் அமித்ஷாவுக்கு எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேச நேரமில்லையோ என்று குமுறுகின்றனர் சிவசேனாவினர்.
போட்டி நிகழ்ச்சிகள்
இதனால் அமித்ஷா பாஜகவினருடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக உத்தவ் தாக்கரேவை முன்வைத்து சில நிகழ்ச்சிகளுக்கு சிவசேனாவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் மும்பை அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கருணாநிதி- ராகுல் பஞ்சாயத்து
முன்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி இருந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி அடிக்கடி வந்தாலும் ஒருபோதும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததே இல்லை. இது திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. இதனாலேயே கூட்டணியில் விரிசலும் வந்தது.
பாஜக- சிவசேனாவின் கதி?
பின்னர் இரு கட்சிகளும் தனித்து தேர்தலை சந்தித்து படுதோல்வியைத்தான் தழுவினர். இதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், கடைசியாக மகாராஷ்டிராவிலும் இப்படி ஒரு நிலைமையைத்தான் பாஜக- சிவசேனா எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர்.